பர்மிஷன் இல்லாமல் பெற்றோரைச் சந்தித்த மாணவர் அடித்துக் கொலை.. தலைமை ஆசிரியர், வார்டன் வெறிச்செயல்
கொல்கத்தா: உரிய அனுமதியின்றி விடுதி வாசலில் பெற்றோரை சந்தித்த மாணவனை, பள்ளி தலைமை ஆசிரியரும், ஹாஸ்டல் வார்டனும் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ரத்ன்பூர் பகுதியை சேர்ந்த ஜுல்ஹஸ் மாலிக் என்பவரது 12 வயது மகன் ஷாமீன் மாலிக். விடுதியில் தங்கி தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தான் ஷாமீன்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் இருந்த ஷாமீனைப் பார்க்க அவனது பெற்றோர் சென்றுள்ளனர். அப்போது வார்டனின் அனுமதியின்றி விடுதியின் வெளியே சென்று பெற்றோரை ஷாமீன் சந்தித்துள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஹஷிப்சேக், வார்டன் லிட்டன்ஷேக் ஆகியோர் ஷாமீனை கண்டித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் ஷாமீனை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஷாமீன் மயக்கமடைந்தான்.
உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட ஷாமீன், சிகிச்சைப் பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தான்.
ஷாமீன் மயங்கி விழுந்ததும் அவனது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் போன் செய்து, தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது ஷாமீனுக்கு உடல்நிலை சரியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது தான் ஷாமீன் அடித்துக் கொல்லப்பட்டது அவனது பெற்றோருக்குத் தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஷாமீனின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமையாசிரியர் மற்றும் வார்டரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவன் அடித்துக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.