மே.வங்கம்: 'கோமியம்' புகழ் திலீப் கோஷ் தூக்கியடிப்பு-புதிய பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தார் நியமனம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவரான திலீப் கோஷ் திடீரென மாற்றப்பட்டு சுகந்த மஜூம்தார் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவராக திலீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி என பெயரெடுத்தவர் அம்மாநில பா.ஜ.க. தலைவராக இருந்த திலீப் கோஷ். கொரோனா பரவல் தொடர்பாக திலீப் கோஷ் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
மாட்டு சிறுநீர் (கோமியம்) குடித்தால் கொரோனா வராது என அடிக்கடி பேசியவர் திலீப் கோஷ். ஆனால் திலீப் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
நீட் தேர்வு: தமிழக முதல்வர் ஸ்டாலினை பின்பற்றுங்கள் மம்தா.. மேற்கு வங்கத்தில் எழுந்த அதிரடி கோஷம்
பாஜகவுக்கு 77 இடங்கள்
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை கொத்து கொத்தாக பாஜகவில் சேர்த்தார். எப்படியும் மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளைக் கைப்பற்றலாம் என கணக்குப் போட்டது பா.ஜ.க. ஆனால் 77 இடங்களில்தான் பா.ஜ.கவால் வெல்ல முடிந்தது.
பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல்
அத்துடன் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் இதுவரை 4 எம்.எல்.ஏக்கள், 1 லோக்சபா எம்.பி, பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தும் விட்டனர். இவர்களை மாநில தலைவராக இருந்த திலீப் கோஷால் தக்க வைக்க முடியவில்லை என்கிற விமர்சனமும் எழுந்தது. மேலும் சில பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு போகக் கூடும் எனவும் கூறப்பட்டது.
மமதா தொகுதியில் இடைத்தேர்தல்
இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து திலீப் கோஷ் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சுகந்த மஜூம்தார் புதிய பா.ஜ.க.தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய துணைத் தலைவர் பதவி
மேலும் பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவராக திலீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திலீப் கோஷ் கூறுகையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா என்னை அழைத்துப் பேசினார். எனக்கு தேசிய அளவில் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். என்னுடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதனை கருதுகிறேன் என்றார்.