கையில் டிபன்பாக்ஸுடன் டான்னு 9.30 மணிக்கு ஆஜராகும் கொல்கத்தா ஆசிரியர்.. வாட் ஏ டெடிகேஷன்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்து வரும் ஆசிரியர் ஒருவர் இணையதள இணைப்பு சரிவர கிடைப்பதற்காக மரத்தில் ஏறி பாடம் நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் மே 3 ஆம் தேதி வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.
இதனால் பள்ளிகள் திறப்பு இன்னும் தள்ளி போகும் என்றே தெரிகிறது. சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதலே புதிய வகுப்புகள் தொடங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது லாக்டவுனால் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உள்ளது.
ஆன்லைன்
எனினும் சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. வழக்கமாக பள்ளி வேலை நாட்களின் போது இயற்கை பேரிடர்களால் விடுமுறை அளிப்பது, பொது விடுமுறைகள் என்பதால் சிலபஸ்ஸை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுவதும் உண்டு. இந்த நேரத்தில் லாக்டவுனால் பள்ளித்த திறப்பு தாமதவதால் மாணவர்கள் மீதான சுமையை குறைக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வகுப்பு
நகர்ப்புறங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த ஆன்லைன் வகுப்புகள் தற்போது கிராமப்புறங்களிலும் நடத்தப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆன்லைன் வகுப்புகளை ஆசிரியர் எடுத்து வருகிறார்.
மரத்தின் உச்சி
அவர் பெயர் சுப்ரலோ பாடி. இவர் தனது ஸ்மார்ட் போன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகிறார். ஆனால் அங்கு இணையதளத்தின் இணைப்பு சற்று வேகம் குறைவாக உள்ளதால் மரத்தின் மீது ஒரு தார்பாயை கட்டிக் கொண்டு தினமும் மரத்தின் உச்சியில் வகுப்பெடுத்து வருகிறார்.
இடையூறு
முதுகில் பேக்கை மாட்டிக் கொண்டு, கையில் டிபன்பாக்ஸுடன் வரப்புகளின் மேல் நடந்து மரம் இருக்கும் இடத்தை அடைகிறார். பின்னர் மரத்தில் ஏறி உச்சியில் அமர்ந்து பாடம் நடத்துகிறார். காலை 9.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு வகுப்புகளை எடுத்து வருகிறார். மரத்தின் உச்சியில்தான் இணையதள எந்த வித இடையூறும் இன்றி கிடைப்பதாக தெரிவிக்கிறார். இந்த ஆசிரியரின் உன்னத, விலை மதிக்க முடியாத சேவையை பாராட்டுவோம்.