மேற்கு வங்கத்திலிருந்து பங்களா.. பெயர் மாற்றத்தை துரிதப்படுத்த மோடிக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்திலிருந்து பங்களா என பெயர் மாற்றக் கோரும் தீர்மானத்தின் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட, தனி நாடாக பிரிக்கப்பட்டது. இப்போதைய வங்கதேச நாட்டு பகுதிகள் பாகிஸ்தானுடன் இருந்தன. 1971இல் கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் என்ற புது நாடாக உருவானது.
இந்த நிலையில்தான், மேற்கு வங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வங்காளிகளிடம் எழுந்தது. கிழக்கு வங்கம் என்ற ஒரு மாநிலம் இல்லாத போது மேற்கு வங்கத்திற்கான தேவை என்ன என்ற நியாயமான கோரிக்கை அது.
புதிய பெயர்
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்திற்கான புதிய பெயரை முன்மொழிந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆங்கிலத்தில் பெங்கால் எனவும், வங்கமொழியில் பங்களா எனவும், ஹிந்தியில் பங்காள் எனவும் மாநிலத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.
பங்களா
ஆனால் இப்படி 3 மொழிகளில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடுவது சாத்தியமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, திருத்தப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய தீர்மானத்தை மேற்கு வங்க சட்டசபையில் இன்று அரசு தாக்கல் செய்தது. இந்த தீர்மானத்தின்படி, 'பங்களா ' என மேற்கு வங்க மாநிலம் அழைக்கப்படும்.
பாஜக அரசு
இந்த தீர்மானம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெயர் மாற்றத்துக்கான ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மம்தா பானர்ஜி
இது போன்ற முயற்சியால் மேற்கு வங்கத்தின் வரலாறு மறைக்கப்பட்டுவிடும் என கூறி வந்தது. பெயர் மாற்றம் செய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
சட்டத்திருத்தம்
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ரிதப்ரதா பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறுகையில் ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அரசியலமைப்பில் சட்டம் கொண்டு வரவேண்டும். இது தொடர்பான காரணிகளை பரிசீலித்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.