பாஜகவின் முதல் "வங்க ஆபரேஷன்" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா!
கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த அந்த மாநில போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் உள்ள நிலையில் இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க துடிக்கும் பாஜகவின் வெற்றியாக இது கருதப்படுகிறது.
உதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்
மம்தா மீது அதிருப்தி
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். அந்த மாநிலத்தில் போக்குவரத்து துறை மந்திரியாக சுவேந்து அதிகாரி இருந்து வருகிறார். கட்சியிலும், மக்களிடத்திலும் செல்வாக்கு உள்ள மனிதரான இவர் கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
அதிரடி
தனது கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். நேற்று அவர் ஹூக்லி நதி பாலம் ஆணையர்களின் தலைவர் எனும் முக்கிய பதவியிலிருந்து விலகினார். இவர் எந்த நேரமும் கட்சியில் இருந்து விலகலாம் என செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் சுவேந்து அதிகாரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை தொலைநகல் மூலம் முதல்வருக்கு அனுப்பினார். முதல்வர் அதனை கவர்னர் ஜகதீப் தங்கருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.
வாய்ப்புக்கு நன்றி
அந்த ராஜினாமா கடிதத்தில், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். அதை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.மாநில மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் பணி செய்தேன்" என்றும் அவர் கூறினார்.
பின்னடைவு
இந்த ராஜினாமாவை கவர்னர் ஜெகதீப் தங்கர் உறுதி செய்துள்ளார். இது குறித்து கவர்னர் டுவிட்டரில் கூறுகையில், இன்று பிற்பகல் முதல்வர் மூலம் சுவேந்து அதிகாரி ராஜினாமா கடிதம் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் செல்வாக்கு மிக்க சுவேந்து அதிகாரி, கட்சியில் இருந்து வெளியேறினால், அது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
செல்வாக்கு மிக்கவர்
பாங்குரா, புருலியா மற்றும் ஜார்கிராம் உள்பட 35-40 சட்டமன்ற தொகுதிகளில் சுவேந்து அதிகாரிக்கு செல்வாக்கு உள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அவருக்கு பவர் உள்ளது. எனவே சுவேந்து அதிகாரியை கட்சியில் தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். அவர் பாஜகவில் சேர உள்ளார் என தகவல் அடிபடுவதால், மாநில பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரிக்கு தூது அனுப்ப தயாராக உள்ளனர்.
பாஜகவுக்கு வெற்றி
சில வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதே தங்களுக்கு இலக்கு என தெரிவித்தார்.தற்போது சுவேந்து அதிகாரி விலகும் நிலையில் உள்ளது, பாஜக இலக்கின் ஒரு வெற்றியாக பார்க்கபடுகிறது.