மேற்கு வங்கம் 2ம் கட்ட வாக்குப்பதிவு 79.51 %: சிறு கலவரத்துடன் முடிந்தது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்ட சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 5 மணிவரைபலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் 79.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே அங்குள்ள பர்த்வான் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் 31 தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. 21 பெண் வேட்பாளர்கள் உட்பட 163 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 70 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.
பதற்றம் மிகுந்த வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பர்த்வான் ஆவட்டத்தில் உள்ள ஜமுரியா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியின் அருகே இரண்டு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றை உடனடியாக போலீசார் செயலிழக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதே தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பூத் ஏஜெண்ட்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கினர். இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.
பர்த்வான் மாவட்டத்தில் பன்டவேஸ்வரர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மூன்றாம்நிலை தேர்தல் அதிகாரி பரிமல் பவுரி என்பவர் வாக்குச்சாவடிக்குள் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, அங்கு சுமார் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. அவரது இடத்தில் வேறொரு அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
மாலை 3 மணி நிலவரப்படி 71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தன. மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 76 சதவிகித வாக்குகளும், கலவரம் நடந்த பர்த்மான் மாவட்டத்தில் 67.96 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. இறுதியாக இந்த தேர்தலில் 79.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.