திடீரென வெடித்து சிதறிய வெடிபொருள் லாரி.. ஒட்டுமொத்த ஊரே தரைமட்டமானது.. 17 பேர் பலி.. பகீர் வீடியோ
அக்ரா: மேற்கு கானாவில் உள்ள நகரம் ஒன்றில் சுரங்கத்திற்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற டிரக் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒட்டுமொத்த ஊரே தரைமட்டமாகியுள்ளது.
Recommended Video
ஆப்பிரிக்காவின் மேற்கு நாடுகளில் ஒன்று கானா. ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட 2ஆவது நாடாக உள்ள கானா, அங்கு வளர்ந்து வரும் நாடுகளில் முக்கியமானது.
இங்குள்ள ஒரு நகரத்தில் ஏற்பட்ட மோசமான வெடிவிபத்தில் தான் இப்போது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை 100 கோடி செலவில் அமைத்த 'அணைக்கரை பாலம்’ திடீரென இடிந்து விழுந்தது!
விபத்து
கானா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள நகரங்களில் ஒன்று போகோசோ. இது கானா தலைநகர் அக்ராவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போகோசோ நகரில் உள்ள அபியேட் கிராமம் அங்குள்ள சுரங்கங்களுக்குப் பெயர் போனது. இந்த கிராமத்தில் உள்ள சுரங்கத்திற்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற டிரக் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
வீடியோ
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் உள்ளூர் கிராம மக்கள் தீயை அணைக்க முயல்வதும் இருப்பினும், அதற்குக் கட்டுப்படாமல் மிக மோசமான கறுப்புப் புகை எழுந்துள்ளதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கானா நாட்டின் மீட்புப் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
17 பேர் பலி
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்குக் கானா அதிபர் நானா அகுஃபோ-அடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டின் தகவல் அமைச்சர் கோஜோ ஓப்போங் நக்ருமா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59 பேர் காயமடைந்துள்ளனர். வெடிபொருட்களை ஏற்றி வந்த டிரக் மீது மோட்டார் பைக் மற்றும் மற்றொரு வாகம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஊரே தரைமட்டமானது
இந்த மிக மோசமான சக்திவாய்ந்த வெடிவிபத்தில் அந்த ஊரே ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதை ஒறு கருப்பு நாள் எனக் குறிப்பிட்ட அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர், இந்த விபத்தால் ஒட்டுமொத்த நகரமே பேய் நகரம் போல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எப்படி நடந்தது
இந்த விபத்து ஏற்பட்டதும் டிராக் தீப்பிடித்து எரியத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட அங்கு வசிக்கும் அபேனா மின்தா, அப்போது ஊர் மக்கள் தீயை அணைக்க முயன்றதாகவும் அப்போது திடீரென டிரக் வெடித்துச் சிதறியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டிரக்கில் மீதமிருக்கும் வெடிபொருட்கள் மீண்டும் ஒரு முறை வெடித்துச் சிதற வாய்ப்புள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல்முறை இல்லை
அதேநேரம் கானா நாட்டில் இதுபோன்ற விபத்துகள் சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 2017இல் அக்ரா அருகே இயற்கை எரிவாயு எடுத்துச் சென்ற டிரக் வெடித்துச் சிதறியதில் 3 பேர் கொல்லப்பட்டனர், அதேபோல கடந்த ஜூன் 2015இல் பெட்ரோல் நிலையத்தில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.