ரயில் நிலையங்களில் 'ஒரு ரூபாய் கிளினிக்'... மத்திய அரசு முடிவு!
ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு சிகிச்சையளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு சிகிச்சை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதிக வருமானத்தை அள்ளித்தரும் அந்தத்துறையில் அரசும் பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது.
அண்மையில் ஒரு ரூபாய்க்கு ஒரு பாட்டில் தண்ணீர் தர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
மேற்கு ரயில்வே
இந்நிலையில் ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் நலனுக்காக
ரயிலில் பயணம் மேற்கொள்வோர் உடல்நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஒரு ரூபாய் கிளினிக்
மேற்கு ரயில்வேக்கு சொந்தமான 10 ரயில் நிலையங்களில் செயல்பட உள்ள இதற்கு, ‘ஒரு ரூபாய் கிளினிக்' என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது மருத்துவரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபி செக்அப் ஃபிரி
ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு 25 ரூபாயும், இசிஜிக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் பரிசோதனை, சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கிளினிக்குகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள்
முதல்கட்டமாக 10 ரயில் நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் இயங்கும். இதைத்தொடர்ந்து, மேற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் 24 ரயில் நிலையங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மே மாதம் மும்பையில்
கடந்த மே மாதம் 10 ஆம் தேதி மும்பையில் உள்ள காத்கோபர் ரயில் நிலையத்தில், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கிளினிக் தொடங்கப்பட்டது. அங்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.