தமிழகத்தைத் தொடர்ந்து மும்பையிலும்.. 30 அடி இறந்த திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு!
மும்பை: மும்பை ஜூஹு கடற்கரையில் 30 அடி நீள திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சமீபத்தில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பையில் இப்போது இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆழந்தலை கடற்கரை பகுதியில் சமீபத்தில் சுமார் 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட 81 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அத்துடன் திமிங்கலங்களை கடலுக்குள் திருப்பி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பெரும்பாலான திமிங்கலங்கள் மணற்பரப்புக்கே திரும்பி வந்து இறந்தன. கரை ஒதுங்கிய 45 சிறிய வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்தன.
இந்த நிலையில் மும்பை ஜூஹு கடற்கரையில் 30 அடி நீள திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. நேற்று இரவு இது கரை ஒதுங்கியது. இரவு 10 மணியளவில் இந்த திமிங்கலத்தைப் பார்த்துள்ளனர்.
இந்த திமிங்கலத்தின் எடை 4 டன் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலு் இது இறந்த 2 நாட்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 42 அடி நீள திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் ரெவ்டன்டா கடற்கரையில் கரை ஒ்துங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த கடற்கரையானது, மும்பைக்கு அருகில் உள்ள ரெய்காட் மாவட்டத்தின் அலிபாக் நகருக்கு அருகே உள்ளது.