நுபுர்சர்மா விவகாரம்: உதய்ப்பூர் டெய்லர் படுகொலை! 2 பேர் கைது! மிரட்டல் வீடியோவில் இருப்பது என்ன?
உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் இன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் கைதான நிலையில் அவர்கள் 2 வீடியோ வெளியிட்டுள்ளனர்.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்நவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே 27ல் தொலைக்காட்சி விவாதத்தின்போது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 2 நபர்கள் 2 வீடியோ வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
நுபுர்சர்மாவுக்கு ஆதரவு! தையல்காரரை படுகொலை செய்து வீடியோ வெளியிட்ட இருவர்! பதற்றத்தில் ராஜஸ்தான்
டெய்லர் தலை துண்டித்து கொலை
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மால்டாஸ் சாலையில் கண்ணையா லால் (வயது 40) என்பவர் தையல் கடை வைத்துள்ளார். டெய்லரான கண்ணையா லாலின் கடைக்கு 2 பேர் சென்றனர். துணி தைக்க வேண்டும் என அவர்கள் கூறினர். இதையடுத்து கண்ணையா லால் அவர்களுக்கு அளவு எடுத்தார். இந்த வேளையில் ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கண்ணையா லாலிடம் தகராறில் ஈடுபட்டு அவரது தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
2 பேர் கைது
இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய இரண்டு நபர்களும் கொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவவே உதய்பூரின் பல பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. தற்போது கொலையாளிகள் முகமது ரியாஸ், முகமது கோஷ் என இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையை துவங்கி உள்ளனர்.
2 வீடியோ வெளியீடு
இந்நிலையில் தான் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் 2 வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஒன்று கண்ணையா லாலை கொலை செய்த வீடியோ. இன்னொன்று கண்ணை லாலின் கொலைக்கான காரணத்தை கூறும் வீடியோவாகும். இந்த வீடியோவில் அவர்கள் கொலைக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளனர்.
வீடியோவில் இருப்பது என்ன?
அதன்படி வீடியோவில் கொலையாளிகள் தங்கள் பெயரை முகம்மது ரியாஸ், முகம்மது கோஷ் என அறிமுகம் செய்கின்றனர். அவர்களின் கைகளில் கத்தி உள்ளது. வீடியோவில் முகம்மது ரியாஸ் உருது மொழியில் பேசுகிறார். அதில், "உதய்பூரில் வாழும் மக்களே உங்களிடம் ஒன்றை கூறுகிறேன். இஸ்லாமிய இறைத்தூதரை விமர்சனம் செய்பவர்களுக்கான தண்டனை என்பது உடலில் இருந்து தலையை தூண்டாக்குவது தான். நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் தான் கொலை செய்யப்பட்டுள்ளார்'' என கூறினர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டும் வகையில், ‛'இந்த கத்தி ஒருநாள் உங்கள் கழுத்திற்கு வர பிரார்த்திக்கிறோம்'' என கூறியுள்ளனர்.
என்ஐஏ விசாரணை
இதற்கிடையே கைதான 2 பேருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். மேலும், இந்த சம்பவம் ராஜஸ்தான் உள்பட பல இடங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பதற்றமான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்சி பாகுபாடின்றி கண்டனம்
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் யாரும் பகிர வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதோடு இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கம் செய்வதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே இந்த கொடூர சம்பவத்துக்கு பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினரும் பாகுபாடு இன்றி கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.