பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணிக்கு ரெடி.. அகிலேஷ் யாதவ் ஏன் அப்படி சொன்னார்?
மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே வேறு முகாமிலிருந்து கூட கூட்டணி அமைக்க ரெடியாவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி வைத்தாவது பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்போம் என்று உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. 403 தொகுதிகளை கொண்ட பெரிய மாநிலமான உ.பியில் தனிப்பெரும்பான்மைக்கு 202 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியது அவசியம்.
பாஜக ஏறத்தாழ இந்த அளவுக்கு வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் பலவும் கூறுகின்றன. ஆனால் அதைவிடவும் அதிக தொகுதிகளை வெல்ல வாய்ப்பில்லை எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
எனவே ஒருவேளை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அப்போது, சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகியுள்ளது.
பிபிசிக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி பெயரை குறிப்பிடவில்லை என்றபோதிலும், எஞ்சியுள்ள ஒரே பெரிய கட்சி அதுதான் என்பதால் கூட்டணி குறித்து அவர் அக்கட்சியை பற்றிதான் பேசியுள்ளார் என்பது உறுதியாகிறது. அதேநேரம், சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணியே தனிப்பெரும்பான்மை பெறும் என்பதில் நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே வேறு முகாமிலிருந்து கூட கூட்டணி அமைக்க ரெடியாவதாக அவர் தெரிவித்துள்ளார். டெல்லியிலுள்ள மத்திய அரசின் ரிமோட் கண்ட்ரோல் பொம்மையாக உ.பி அரசு மாறிவிட கூடாது என்பதற்காக எல்லா சக்திகளையும் பயன்படுத்தி பாஜகவுக்கு முட்டுக்கட்டை போடுவேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.