காங்கிரஸ் தலைவராகும் ராகுல்காந்தி... சட்டு புட்டுனு செய்ய வேண்டிய 4 காரியங்கள் என்னென்ன?
காங்ரிகஸ் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முன் இருக்கும் முக்கியமான 4 சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
டெல்லி : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி தற்போதைய அரசியல் சூழலில் தனது கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல செய்ய வேண்டிய 4 காரியங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 19 ஆண்டுகளாக இருந்த சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பேச்சு எழுந்தது. அப்போது 47 வயது ராகுல்காந்தியை கட்சியின் தலைவராக அறிவிக்க பலரும் ஆலோசனை தெரிவித்தனர்.
இதனையடுத்து ராகுலை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் தந்தாலும், கட்சி தேர்தல் முறைப்படியே அவர் மனுதாக்கல் செய்து இன்று அதிகாரப்பூர்வமாக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டிசம்பர் 16ம் தேதி ராகுல்காந்தி பொறுப்பேற்கிறார்.
கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவது
காங்கிரஸ் கட்சி தற்போது இருக்கும் நெருக்கடியான சூழலில் உடனடியாக ராகுல்காந்தி இந்த விஷயங்களை செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதலில் ராகுல்காந்தி கட்சியை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 131ஆண்டு கால பழமை வாய்ந்த கட்சியில் புதுமைகளை புகுத்த புதிய சிந்தனை கொண்ட இளைஞர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினால் தான் முடியும். ஆனால் அதையும் வழிவழியாக கட்சியில் இருக்கும் அரசியல் மற்றும் மூத்த தலைவர்களை சமாளித்து இந்த மாற்றத்தை ராகுல் கொண்டு வர வேண்டும், அதில் தான் அவரது சாமர்த்தியம் இருக்கிறது.
பொதுத் தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்
அடுத்ததாக 2018ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதோடு அண்டை மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் பாராட்டும் கூட்டணி தர்மத்தையும் அவர் கட்டிக்காக்க வேண்டிய கடமை உள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டில் கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபை தேர்தல் என தேர்தல்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. இது மட்டுமல்ல ஓராண்டில் ராகுல் செய்யும் மாற்றங்கள் தான் 2019ல் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.
சமாளிக்க முடியாத சூழல் இல்லை
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் இல்லாதது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி என இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமான விஷயங்கள் தான். எனினும் இந்த சவாலை சமாளிக்க முடியாது என்ற நிலை இல்லை என்பதே காங்கிரஸ் தலைவர்களின் கருத்து. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2004 மற்றும் 2009 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.
கூட்டணி கட்சிகளுடனான அணுகுமுறை
இதே போன்று மதச்சார்பின்மை கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டவர் சோனியாகாந்தி என்ற பாராட்டை மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுடன் கடைசி வரை நல்ல அணுகுமுறையையே அவர் கையாண்டார். ராகுல் காந்தியும் அதே அணுகுமுறையை பின்பற்றி கூட்டணி கட்சிகள் வேறு கூட்டணிக்கு மாறிவிடாமல் தடுக்க வேண்டிய கடமையும் ராகுல்காந்திக்கு உள்ளது.