அய்யய்யோ மழை காலம் வந்துடுச்சே: கவலையில் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: பெங்களூர் மக்களுக்கு மழை காலம் வந்தாலே கூடவே எரிச்சலும், அலுப்பும் வந்துவிடுகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களாக மாலை நேரமாகிவிட்டால் வான் இருட்டிக் கொண்டு வந்து மழை கொட்டு கொட்டு என கொட்டித் தீர்க்கிறது. அதுவும் மாலையில் அலுவலகத்தில் இருந்து மக்கள் கிளம்பும் நேரத்தில் தான் சொல்லி வைத்தது போன்று மழை பெய்கிறது.
மழை என்றால் பெங்களூர்வாசிகள் டென்ஷனாக இவை தான் காரணம்,
போக்குவரத்து நெரிசல்
நல்ல காலத்திலேயே பெங்களூரில் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்நிலையில் மழை பெய்துவிட்டால் சொல்லவே வேண்டாம். 5 கிலோமீட்டர் தூரத்தை நீங்கள் 1 மணிநேரத்தில் பயணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 15 நிமிடம் தொடர்ந்து மழை பெய்தால் போதும் பல இடங்களில் முதல்வன் படம் போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இது மிகையல்ல.
சாக்கடை
மழை பெய்யும் போது எல்லாம் சாக்கடைகள் நிரம்பி வழிந்து சாலை எல்லாம் கழிவுநீர் ஓடும். இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டு செல்கையில் சாக்கடை நீரால் சங்கடப்படுகிறார்கள்.
நீர் தேக்கம்
பெரிய ஐடி நகரமான பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் குறுகியவை. அதும் குண்டும், குழியுமாக வேறு இருக்கும். இந்நிலையில் மழை பெய்தால் சாலைகளில் நீர் தேங்கி அந்த குழிகள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். இந்த காரணத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நீர் தேங்கியுள்ள குழிகளில் விழுந்து காயம் அடைகிறார்கள்.
மின்தடை
வானம் இருட்டிக் கொண்டு லேசாக இரண்டு தூரல் வந்தால் போதும் உடனே மின்தடை ஏற்படும். செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரின் சில பகுதிகளில் நான்கரை மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
நடந்து செல்பவர்கள்
மழை காலங்களில் சாலையில் நடந்து செல்பவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. மழை நீர் தேக்கம் மற்றும் சாக்கடையை தவிர்க்க இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் கண்ட பக்கம் எல்லாம் செல்வதால் மக்கள் நடந்து செல்ல அவதிப்படுகிறார்கள். நடந்து செல்பவர்களுக்காக சாலையோரம் கட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வதால் கால்நடையாக செல்பவர்களின் நிலை பரிதபாமோ பரிதாபம்.