வெயில், மழை, எக்ஸ்ரே.. பாக். உளவாளிகள் இந்தியா குறித்து பரிமாறும் சங்கேத வார்த்தைகள் பற்றி தெரியுமா?
டெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்தியாவில் உளவு பார்க்கும்போது என்னென்ன மாதிரியான ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி போனில் பேசிக்கொள்கிறார்கள் என தெரியுமா?
பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்களின் தொலைபேசி உரையாடல்களை இந்திய உளவுத்துறை அமைப்பினர் இடை மறித்து கேட்பது வழக்கம். இதை உணர்ந்து அவர்கள் சங்கேத மொழியில் பேசுவார்கள். அதையும் இந்திய அதிகாரிகள் கண்டறிந்துவருகிறார்கள்.
இதுகுறித்து, இந்திய உளவு அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் கூறிய தகவல்கள் இதுதான்:
டாக்டர், எக்ஸ்ரே
2015ம் ஆண்டு ஒருநாள் நாங்கள் ஒரு தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டபோது, யாரோ மருத்துவ தேவைக்காக போராடுகிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஏனெனில், நான் டாக்டரிடம் போனேன், நான் சிக்கலில் இருப்பதால் அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்தேன், எக்ஸ்ரே எடுத்தேன்.. இவ்வாறு அந்த உரையாடல் இருந்தது.
டாக்டர்
இதன் பொருள் குறித்து நாங்கள் ஆய்வு நடத்தியபோது, டாக்டர் என்பது ராணுவத்தையும், அறுவை நிபுணர் என்பது எல்லை பாதுகாப்பு படையையும், எக்ஸ்ரே என்பது தகவல் அனுப்பப்பட்டுவிட்டது என்பதையும் குறிக்கும் சொல் என்பதை புரிந்து கொண்டேன்.
மீன் சாப்பிட்டாச்சு
மற்றொரு முறை, சகோதரரிடம் கூறிவிடுங்கள், நான் மீன் சாப்பிட்டுவிட்டேன் என்பதை என ஒரு தொலைபேசி உரையாடல் கூறியது. அது, போர்க்கப்பல் குறித்த தகவலை நான் வழங்கிவிட்டேன் என்று கூறும் பொருளாகும்.
மழை, வெயில்
சமீபத்தில் ராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் ஐஎஸ்ஐ ஏஜென்ட் பேசிய வார்த்தை, முழுக்க பருவநிலை சார்ந்ததாக இருந்துள்ளது. இந்திய அதிகாரிகளும் அது வெப்பம், குளிர் தொடர்பானது என நினைத்துள்ளனர். ஏனெனில் பேசியவர், இங்கு மழை, வெயில், குளிர் இருக்கிறது என அவ்வப்போது கூறி வந்துள்ளார். ஆனால் அதை ஆய்வு செய்தபோது, மழை என்பது வான்படையையும், குளிர் என்பது எல்லை பாதுகாப்பு படையையும், வெப்பம் என்பது ராணுவத்தையும் குறிக்கிறது.