சிறையில் இருந்து செல்போனுடன் ஹாயாக கோர்ட்டுக்கு வந்த தீவிரவாதி யாசின் பட்கல்?
ஹைதராபாத்: சிறைக்குள் செல்போன் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவரும்போது, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் பாக்கெட்டில் செல்போன் இருந்ததாக பரபரப்பு சர்ச்சை எழுந்துள்ளது.
தீவிரவாதி யாசின்பட்கல், பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வருபவர். தற்போது ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹைதராபாத் சிறைக்குள் இருந்து பட்கல், செல்போனில் அவரது மனைவியிடம் பேசியதாகவும், அப்போது, எனக்கு உதவி செய்பவர்கள் சிறையில் இருந்து தப்பிக்கச் செய்வார்கள் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹைதராபாத் கோர்ட்டில் பட்கல் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். சிரித்த முகத்துடனே பட்கல், கோர்ட்டுக்கு வந்தார். ஆனால், மீடியாக்கள் கவனம், அவரது சட்டை பாக்கெட் மீதுதான் போனது. கேமராமேன்கள் பாக்கெட்டை ஜூம் செய்தனர்.
இந்த களேபரத்துக்கு காரணம், பட்கல் பையில் செல்போன் போன்ற கருவி இருந்ததுதான். இதுகுறித்து நேற்று முதலே பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்தான் என்று சில பத்திரிகையாளர்கள் சொன்னால், மற்றும் சிலர், ஜெயில் அதிகாரிகளும், பட்கலும் முட்டாள்கள் இல்லை. கோர்ட்டுக்கு செல்போனுடன் பட்கல் வர வாய்ப்பில்லை என்று சில பத்திரிகையாளர்களும், இல்லை, அது செல்போன்தான் என்று சில பத்திரிகையாளர்களும் வாதிட்டு வருகின்றனர்.
சிலர், படத்தை ஜூம் செய்து பார்த்துவிட்டு, அது பாக்கெட் சைஸ், குர்ஆன் என்று விளக்கம் கொடுக்கின்றனர். எது எப்படியோ எப்போதுமே வித்தியாசமான ஆள்தான் பட்கல். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அதை ஒப்புக்கொள்கின்றனர். பெங்களூர் போலீசாரின் விசாரணைக்கு உள்ளாகி இருந்த பட்கல், வெண்ணை தோசை கேட்டு சாப்பிட்டுள்ளார்.
டெல்லி, மும்பை போலீசாரிடம் விசாரணைக்குட்பட்ட போது, எனக்கு தூக்கம் வருது, நீங்க வெளியே போறீங்களா என்று கேட்டவர்தான் பட்கல். ஆனால், உண்மைகள் வெளியே வர வேண்டும் என்பதற்காக, மிகவும் பொறுமையாக விசாரணை நடத்துவது போலீசாரின் வழக்கம் என்று விசாரணை அதிகாரிகள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தொடர்ந்து மெத்தனம் காட்டினால், விசாரணை முறை மாறும் என்றும் எச்சரிக்கின்றனர்.
ஹைதராபாத் சிறையில் பட்கல் செல்போன் பேசினாரா என்பது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "சிறையில் இருமுறை, பட்கல் தனது குடும்பத்தாருடன் பேசியது உண்மைதான். ஆனால், சிறையிலுள்ள தொலைபேசியில்தான் பேசினார். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். விதிமுறைப்படிதான் அந்த உரையாடல் நடந்தது. செல்போனில் பேசியதாக கூறப்படும் தகவலில் அடிப்படையில்லை" என்று தெரிவித்தனர்.