சொன்னதைச் செய்யும் தலைவர் நரேந்திர மோடி: ஸ்மிரிதி இராணி
ஸ்மிரிதி இராணி, குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.பியும் ஆவார். இவர் சாஸ் பி கபி பஹு தி என்ற டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் .
அகமதாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூறியதாவது:
ராஜீவ் காந்தி காலம் எல்லாம் போய் விட்டது. முதல்வர் நரேந்திர மோடி தான் சொன்னதைச் செய்கிறார். அவர் செய்வதை இங்குள்ள பெண்கள் பாராட்டுகிறார்கள்.
வெறுமனே அவர் கவர்ச்சிக்காக எதையும் செய்வதில்லை. மாறாக உண்மையிலேயே அனைவருக்கும் பயன்படியான திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறார். இதுதான் பெண்களைக் கவர்ந்துள்ளது.
பெண்கள் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி நம்பி விட்டால் கடைசி வரை அவர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள். பெண்கள் சுயமாக எதையும் செய்வதில்லை, வீட்டில் உள்ள ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தவறான ஒரு கருத்து நிலவி வருகிறது. அது தவறு.
2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பெண்களை நான் குஜராத் அழைத்து வந்தேன். மாநிலம் முழுவதும் அவர்கள் சுற்றிப் பார்த்தனர். பின்னர் நரேந்திர மோடியை அவர்கள் சந்தித்தனர். அப்போது எது சரியாக இருக்கிறது, எது இல்லை என்று அவர்களிடம் கேட்டார் மோடி. அப்போது பெண்கள் கூறிய கருத்துக்களையும், யோசனைகளையும் அவர் உன்னிப்புடன் கேட்டுக் கொண்டார்.
பெண்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து உண்மையான அக்கறையுடன் அவர் கேட்டார். மேலும் அவர்கள் சொன்ன பல யோசனைகளை உடனடியாக அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டார் என்றார் ஸ்மிரிதி இராணி.