ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்... தமிழகத்திற்கு ரூ 3000 கோடி ஒதுக்குவாரா சுரேஷ் பிரபு?
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில், தமிழக முக்கிய ரயில் திட்டங்களுக்கு, 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பொது பட்ஜெட் வரும் 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வழக்கமாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி 2016-17-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பு, வசதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும். ரயில் பெட்டிகளை மேம்படுத்துவது, ரயில்களில் இணையதள வசதி அளிப்பது, ரயில் நிலையங்களில் வசதிகளை அதிகரிப்பது, ரயிலில் "பயோ டாய்லெட்' அமைத்தல், சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துதல், தண்ணீரை மறுசுழற்சி செய்தல், மின்மயமாக்கல், எல்இடி விளக்குகள் பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தெரிகிறது.
பயணிகள் சேவை, பாதுகாப்பு, ரயில்வே கட்டுமானம், வழித்தடம் நீட்டிப்பது ஆகிய நான்கு அம்சங்களுக்கு, ரயில்வே பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்திருந்தார். ரயில்களில் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சுரேஷ் பிரபு வெளியிடுவார் என்றும் தெரிகிறது.
இதனிடையே ரயில்வே பட்ஜெட்டில், தமிழக முக்கிய ரயில் திட்டங்களுக்கு, 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த, 2015 ரயில்வே பட்ஜெட் அறிவிப்புகளும்,அதன்படியே அமைந்தன. மேலும், விரைந்து முடிக்கக்கூடிய ரயில் பாதை திட்டங்களுக்கு, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்திற்கு, 2,434 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இது, அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும், 740 கோடி ரூபாய் அதிகம்.
இந்த சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், தமிழகத்தின் முக்கிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து, தெற்குரயில்வே ஊழியர்கள் சங்க செயல் தலைவர் ஆர்.இளங்கோவன், தமிழகத்தில் புதிய ரயில் பாதை, அகல ரயில் பாதை, இரட்டை ரயில் பாதை ஆகிய மூன்று திட்டங்களுக்கு மட்டுமே, 12 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இந்த பணியை விரைவுப்படுத்த, இந்தாண்டுக்கான ஒரு பகுதி நிதியாக, பட்ஜெட்டில், 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், கடந்தாண்டு ஒதுக்கிய நிதியில், 60 சதவீதம் மட்டுமே விடுவிக்கப்பட்டுஉள்ளது; மீதம், 40 சதவீதம் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.