அப்பப்பா, இந்த ஷீனா போரா கொலை வழக்கில் தான் எத்தனை டுவிஸ்ட்?
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணிக்கு முதல் கணவர் மூலம் ஷீனா போரா, மிக்கைல் போரா ஆகிய குழந்தைகள் பிறந்தனர். இந்திராணி அவர்களை கவுஹாத்தியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு சஞ்சீவ் கன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ், இந்திராணிக்கு விதி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் சஞ்சீவை பிரிந்த இந்திராணி ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தார்.
ஷீனா
மகள் ஷீனா, மகன் மிக்கைலை இந்திராணி தனது கணவர் பீட்டரிடம் தன் தங்கை, தம்பி என்று அறிமுகம் செய்து வைத்தார். தனது கடந்த கால வாழ்க்கையை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.
மிரட்டல்
இந்திராணி போடும் நாடகத்தை பார்த்த ஷீனாவும், மிக்கைலும் அவரிடம் பணம், கார், வீடு கேட்டு மிரட்டத் துவங்கினர். அதிலும் ஷீனா பண விஷயத்தில் கறாராக இருந்தது இந்திராணிக்கு எரிச்சலை அளித்தது.
காதல்
ஷீனா பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலை காதலித்தார். மேலும் அவருக்கு இந்திராணிக்கு தெரிந்த நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
கொலை
இந்திராணி தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ராயுடன் சேர்ந்து 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஷீனாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். அதன் பிறகு ஷீனாவின் உடலை ரைகாட் காட்டுப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.
மிக்கைல்
ஷீனாவை கொலை செய்த அதே நாளில் மிக்கைலையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் இந்திராணி. இதை அறிந்த மிக்கைல் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார்.
வெளிநாடு
ஷீனாவை கொலை செய்துவிட்டு அவரை பற்றி கேட்ட ராகுல் உள்ளிட்டோரிடம் அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறி நாடகமாடி வந்தார் இந்திராணி.
டிரைவர்
கொலை சம்பவத்தை அடுத்து இந்திராணி டிரைவர் ராய்க்கு பணம் கொடுத்து அவரை வேறு எங்காவது வேலைக்கு சேருமாறு கூறிவிட்டார். ராய் இந்த ஆண்டின் துவக்கத்தில் பார் ஒன்றில் குடித்துவிட்டு போதையில் போலீஸ் இன்பார்மரிடம் ஒரு பெரிய பணக்கார பெண் தனது மகளை கொன்றுவிட்டு அதை மறைக்க தனக்கு குறைவான பணம் கொடுத்ததாக உளறினார். இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் தான் இந்திராணி சிக்கினார்.
போன் அழைப்பு
ஷீனாவின் பள்ளித் தோழியின் கணவர் மீரட்டில் இருந்து மும்பை போலீசாருக்கு போன் செய்து ஷீனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். அவர் ராணுவத்தில் பணிபுரிகிறார்.
இந்திராணி
ராயை பிடித்து விசாரித்த போலீசார் ஷீனா கொலை பற்றி வழக்குப்பதிவு செய்து இந்திராணி, ராய், சஞ்சீவ் கன்னா ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிபிஐ
மும்பை போலீஸ் விசாரித்த வந்த இந்த வழக்கு சிபிஐ வசம் மாறியுள்ளது. இதற்கிடையே சிறையில் இருக்கையில் இந்திராணியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மும்பையில் உள்ள ஜெ.ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்கொலையா?
இந்திராணி தற்கொலை செய்ய நினைத்து அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரின் தாய் இறந்த செய்தி கேட்டு அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக இந்திராணியே பின்னர் தெரிவித்தார். சிறைக்கு திரும்பிய அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.
பீட்டர் முகர்ஜி
செப்டம்பர் மாதத்தில் இருந்து ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை பீட்டர் முகர்ஜியை கைது செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிக்கை
ஷீனா கொலை வழக்கில் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தென்மும்பையில் உள்ள எஸ்பிளானட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஆர்.வி. அடோன் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.