என்ன தான் ஆச்சு காங்கிரஸ் கட்சிக்கு...? சோதனை மேல் சோதனை வர என்ன காரணம்?
Recommended Video
டெல்லி: நூற்றாண்டை கடந்த பேரியக்கம் என்ற பெருமையை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில ஆண்டுகளாக என்ன ஆனதோ தெரியவில்லை, தொடர் தோல்விகளையும், சரிவுகளையுமே மட்டுமே சந்தித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்வியால், வலிமையான தலைவர்கள் யாரும் அந்தக் கட்சியில் இல்லையோ என்ற கேள்வி தான் மக்கள் மத்தியிலும் சரி காங். தொண்டர்கள் மத்தியிலும் சரி எழுகிறது.
ஆனால் இந்த விவகாரத்தை நாம் ஆராய்ந்து பார்த்தோம் என்றால் பல வலிமையான தலைவர்களும், அரசியல் சாணக்யர்களும் காங்கிரஸ் கட்சியில் இருப்பதை அறிந்துகொள்ள முடியும். அப்படி அவர்கள் இருந்தும் காங்கிரஸ் சரிவு பாதையில் பயணிக்கிறது என்றால் உண்மையிலேயே அது தீர ஆராயப்பட வேண்டிய ஒன்று.
தலைநகரில் விழுந்த சம்மட்டி அடி.. கோலியாத்தை குறி வைத்து வீழ்த்திய தாவீது.. மிரண்டு போன பாஜக!
பழம்பெரும் கட்சி
இந்தியாவின் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத ஒரு பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. நூற்றாண்டை கடந்த பேரியக்கமாக அந்தக் கட்சி பயணித்துக்கொண்டிருக்கிறது. நாட்டிற்காக எத்தனையோ பல நல்ல திட்டங்களை அந்த கட்சி கொண்டு வந்துள்ளது. இந்தியா முழுவதும் கட்சி வேரூன்றி கிளை பரப்பியுள்ளது. இப்படி கட்சியின் கட்டமைப்பில் எந்த குறையும் இல்லாத போதும், தொடர் தோல்விகளை கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு சந்தித்து வருகிறது. அதுவும் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் அடைந்துள்ள தோல்வியை அதிர்ச்சி தோல்வி என்றே கூறலாம். ஓரிரு தொகுதிகளை தவிர வேறு எந்த தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கவில்லை.
காங். அரசு
டெல்லியை பொறுத்தவரை மறைந்த ஷீலா தீட்சித் காங்கிரஸ் முதல்வராக 15 ஆண்டுகள் இருந்தவர். 1998-ம் ஆண்டு முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் டெல்லியை மேலும் மெருகேற்றி நவீனமயமாக்கியது காங்கிரஸ் அரசு தான். அதை யாரும் மறுப்பதற்கில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி முதல்வரான ஷீலா தீட்சித் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. ராஜதந்திரமாக சுமூக உறவை கையாண்டு டெல்லிக்கு தேவையான அனைத்து திட்டங்களை செய்து முடித்தார். அதற்கு உதாரணமாக ஷீலா தீட்சித் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சுமார் 70-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள், 2002-ம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்ட டெல்லி மெட்ரோவை கூறலாம்.
தலைவர்
காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியின் முகமாக திகழ்ந்த ஷீலா தீட்சித் நாள் தோறும் மக்களை தனது இல்லத்தில் சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டு உதவி செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தார். தன்னை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் மனு அளிக்கலாம் என்ற நடைமுறையை பின்பற்றினார். ஷீலா தீட்சித்தின் இந்த எளிமையும், சமூகத்துடன் ஒட்டி உறவாடியஒற்றுமையும் தான் காங்கிரஸ் கட்சியை 15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி புரிய வைத்தது. அவரது மறைவுக்கு பிறகு டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு செல்வாக்குபெற்ற தலைவர் இல்லை என்பது பெரிய குறை.
சாணக்யர்கள்
இதனிடையே சல்மான் குர்ஷித், கபில் சிபில், ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, திக் விஜய் சிங், சுசில் குமார் ஷிண்டே போன்ற சாணக்கியர்கள் இருந்தும் அவர்கள் ராகுலுடன் இணைந்து பயணிக்க தயங்கி ஒதுங்கி நிற்பதால் காங்கிரஸ் தள்ளாட்டத்தில் நிற்கிறது. ராகுலும் சீனியர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்கள் வகுக்கும் வியூகங்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. மிலிந்த் தியோரா, சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா, கே.சி.வேனுகோபால், மானிக்கம் தாகூர் என அவர் அவருக்கான டீமை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார். ஆனால் அந்த அரசியல் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. மேலும், தோல்வியை கண்டு துவளும் மனநிலையை கொண்டவராக உள்ள ராகுல் டெல்லி பிரச்சாரத்திலும் போதிய ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில நாட்கள் பிரச்சாரம் செய்தபோதும், அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றி பேசுவதை விடுத்து, மோடி தாஜ்மஹாலை விற்றுவிடுவார் என கதைக்கு தொடர்பில்லாத விவகாரத்தை பேசினார். இப்படி ஒவ்வொரு விவகாரத்திலும் அஜாக்கிரதையாக காங்கிரஸ் நடந்துகொள்வதாலேயே தொடர் தோல்விகளில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.