இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்.. பிணைக் கைதியாக இந்திய விமானி அபிநந்தன்!
Recommended Video
ஸ்ரீநகர்: இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி, விமானி அபிநந்தன் வர்த்தமானை பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் பாகிஸ்தான் எப்-16 ரக விமானங்கள் இந்திய எல்லைக்குள் ராஜூரியில் தாக்குதல் நடத்துவதற்காக புகுந்தது. மொத்தம் 2-3 விமானங்கள் இந்திய எல்லைக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 6 இந்திய விமானப்படை விமானங்கள் உடனடியாக காஷ்மீரில் உள்ள ராஜூரிக்கு புறப்பட்டு சென்றது.
அதில் ஒரு விமானம்தான் இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான் சென்ற விமானம். காலை 10.20 மணிக்கு பாகிஸ்தான் விமானத்தை துரத்திக் கொண்டு சென்றவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. ரேடாரில் அவர் சென்ற விமானம் மர்மமாக பாகிஸ்தான் அருகே மறைந்தது.
இவர் எங்கே இருக்கிறார் என்று உறுதிப்படுத்த கூடிய வகையில் எந்த விவரமும் வெளியாகவில்லை. இவரை குறித்து நிறைய தகவல்களும், புகைப்படங்களும், வீடியோக்களும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஆழ்ந்த அமைதி காத்தது.
பாகிஸ்தான் கூறியது
இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, எல்லை மீறி பாகிஸ்தானுக்குள் வந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம். ஒரு விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் விழுந்துவிட்டது. இன்னொரு விமானம் ஆசாத் காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்) விழுந்துவிட்டது. நாங்கள் இரு விமானிகளை கைது செய்து பிடித்து வைத்து இருக்கிறோம் என்று கூறியது.
வேறு எதையும் சொல்ல முடியாது.. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோதும் தில் காட்டிய இந்திய பைலட்
3 கிமீ
இந்த இரண்டு விமானங்களும் பாகிஸ்தானுக்கு உள்ளே வந்த பின்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஒரு விமானம் பாகிஸ்தானின் எல்லைக்குள் 3 கிமீ தூரம் வரை வந்து உள்ளது. அதன்பின்பே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது.
யார் கைது
இந்த நிலையில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட விமானியின் பெயர் அபிநந்தன் வர்த்தமான் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இவர் மிக் 21 பைசன் ரக விமானம் மூலம் இன்று காலை பாதுகாப்பு பணிக்கு சென்று இருக்கிறார். இவரைதான் பாகிஸ்தான் தனது எல்லையில் சுட்டு வீழ்த்தி கைது செய்து சிறைபிடித்து இருக்கிறது என்று செய்திகள் வெளியானது.
மறுப்பு தெரிவித்தது
ஆனால் இந்தியா இந்த செய்தியை தொடக்கத்தில் மறுத்தது. பாகிஸ்தான் பொய் சொல்கிறது. பாகிஸ்தான் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை. எங்கள் விமானியை பாகிஸ்தான் கைது செய்யவில்லை என்று இந்தியா கூறியது.
வீடியோ வெளியானது
இதையடுத்து அபிநந்தன் வர்த்தமான் இருப்பதாக கூறப்படும் வீடியோ பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளியானது. அதில் அபிநந்தன் தன்னுடைய அடையாளங்களை கூறுவது பதிவாகி இருந்தது. என் பெயர் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், சர்வீஸ் எண் 27981. நான் வேறு எதுவும் விஷயங்களை சொல்ல முடியாது, என்று அதில் அவர் கூறி இருந்தார். இந்த வீடியோ பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான்
என்னை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ளது என்றும் அவர் அதில் கூறி இருந்தார். என் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார் என்று வீடியோவில் அபிநந்தன் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அபிநந்தன் முகத்தில் அடிபட்டு, காயங்களுடன் இருந்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது.
சர்ச்சை எழுந்தது
இந்த நிலையில் இந்த புகைபடமும்,செய்திகளும் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இவர் இந்திய கமாண்டோ கிடையாது. இந்திய விமானப்படை அதிகாரிகள் மீசை வைத்து இருக்க மாட்டார்கள். அதற்கு அனுமதி இல்லை என்று விவாதங்கள் செய்யப்பட்டது. அதேபோல் அபிநந்தன் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேறு வேறு புகைப்படங்களும் வெளியானது.
ஒன்றாக இருந்தது
அதன்பின், வீடியோவில் அபிநந்தன் கூறி இருக்கும் செய்திகள் உண்மைதானா என்று சார்பார்க்கப்பட்டது. இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ பாரத் ரக்ஸாக் தளத்தில் அவரின் விவரங்கள் இருந்தது. வீடியோவில் அபிநந்தன் கூறிய சர்விஸ் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மிக சரியாக விமானப்படை பக்கத்தில் இருந்தது, இந்திய தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனால் இந்த இணைய பக்கம் சில நிமிடத்தில் முடக்கப்பட்டது.
பொருட்களின் புகைப்படம்
அதேபோல் அபிநந்தன் பயன்படுத்தும் கண்ணாடி, பாகிஸ்தான்- இந்தியா வரைப்படம், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டு அது புகைப்படமாக இணையத்தில் வெளியானது. அதில் இருந்த ஆவணங்களின்படி அபிநந்தன் 51 ஸ்குவாடை சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறினார்கள்.
|
சில தகவல்கள்
அதன்பின் இந்திய தரப்பில் இருந்தும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது. இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று தகவல் வெளியானது. விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வீடியோ
அதையடுத்து பாகிஸ்தான் பிடித்து வைத்து இருப்பது அபிநந்தன்தான் என்பதை நிரூபிக்க இன்னொரு வீடியோ ஆதாரமும் அந்த நாட்டில் இருந்து வெளியானது. யூ டியூபில் 2016ல் வெளியான Inside India's SU-30' என்ற டாக்குமெண்டரி வீடியோவில் இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் அபிநந்தன் இருக்கும் காட்சிகள் கொண்ட வீடியோவையும் பாகிஸ்தான் தரப்பு வெளியிட்டது.
ஒப்புக்கொண்டார்
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதை செலுத்திய விமானி அபிநந்தனைக் காணவில்லை. அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவிக்கிறது. அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
முக்கியமான நபர்
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் வான்வெளி சண்டையில் மிக முக்கியமான நபராக, மிக முக்கியமான திருப்பமாக அபிநந்தன் மாறியுள்ளார். அவரை மீட்க ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா நாடவுள்ளது.