பற்றி எரியும் பார்டர்கள்.. 146 ஆண்டுகளாக நீடிக்கும் அஸ்ஸாம்- மிசோரம் எல்லை பஞ்சாயத்து- என்ன நடந்தது?
குவஹாத்தி: அஸ்ஸாம்-மிசோரம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. அஸ்ஸாமை சேர்ந்த 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தால் 146 ஆண்டுகாலமாக நீடிக்கும் இருமாநில எல்லை பிரச்சனை விஸ்வரூபமாகி உள்ளது.
Recommended Video
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக அஸ்ஸாமின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தன. நாடு விடுதலை அடைந்த பின்னர் அஸ்ஸாமில் இருந்து 1963-ல் நாகாலாந்து, 1972-ல் அருணாச்சல பிரதேசம், 1972-ல் மேகாலயா, மிசோரம் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்
கி.பி.1875-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஒரு எல்லை பிரிவினை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்படி மிசோரம் மக்களின் லுசாய் மலைப் பகுதி, அஸ்ஸாமின் சச்சார் மாவட்டம் இணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1933-ம் ஆண்டு மற்றொரு எல்லைப் பிரிவினை நடவடிக்கையை ஆங்கிலேய அரசு மேற்கொண்டது. இந்த 2-வது எல்லைப் பிரிவினையானது மிசோரம் மக்களின் லுசாய் மலைப் பகுதி- மணிப்பூர் இடையேயானது. ஆனால் இதற்கு மிசோரம் மக்கள் அன்று முதல் இன்று வரை எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய ஒப்பந்தங்கள்
1875-ம் ஆண்டு எல்லைப் பிரிவினை நடவடிக்கை மிசோரம் மக்களின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டது. 1933-ம் ஆண்டு எல்லைப் பிரிவினை மிசோரம் மக்களின் ஒப்புதலைப் பெறாமல் உருவாக்கப்பட்டது. ஆகையால் அதனை ஏற்க முடியாது என்பதுதான் இன்றளவும் மிசோரம் நிலைப்பாடு. ஆனால் 1933-ம் ஆண்டு எல்லை பிரிவினையைத்தான் ஏற்க வேண்டும் என்கிறது அஸ்ஸாம்.
எல்லை பஞ்சாயத்துகள்
கடந்த ஆண்டு அஸ்ஸாம் எல்லைக்குள் நுழைந்து மிசோரம் மாநில மக்கள் மூங்கில் குடில்களை அமைத்தனர். அப்போது அஸ்ஸாம் போலீசார் இந்த குடில்களை அகற்றியதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
அஸ்ஸாம் ஆக்கிரமிப்பு
கடந்த ஜூன் மாதம் மிசோராம் எல்லைக்குள் நுழைந்து Aitlang hnar என்ற பகுதியை அஸ்ஸாம் போலீசார் ஆக்கிரமித்தனர். அப்போது இருந்தே மோதல் வெடித்துவிட்டது. பின்னர் சில நாட்களுக்கு முன்னர் கொலாசிப் மாவட்ட எல்லையில் மிசோரம் மக்கள் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து அஸ்ஸாம்- மிசோரம் இருதரப்பு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் அஸ்ஸாம் போலீசார் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அஸ்ஸாம், மிசோரம் முதல்வர்கல் மோதல்
இதனால் இரு மாநிலங்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருப்பது. தற்போது பிரச்சனைக்குரிய எல்லையில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம், மிசோரம் மாநில முதல்வர்கள் இருவரும் பரஸ்பரம் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுடனும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு எல்லை பிரச்சனை தொடந்து நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.