சந்தையில் இருந்து சாக்கடை வரை ஒரே நெட்வொர்க்- இதுதான் “ஸ்மார்ட் சிட்டி”!
டெல்லி: நாட்டில் முதல் கட்டமாக அமைக்கப்பட உள்ள 20 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் 5 தலைநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பலருக்கும் ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன என்கின்ற கேள்வி எழுந்திருக்கும். ஒரே நெட்வொர்க்கில் அமையும் வகையிலான அத்தியாவசிய விஷயங்கள் ஒரு சேர அமைந்ததுதான் "ஸ்மார்ட் சிட்டி".
இந்த சர்வதேச தரத்திலான நகரங்களுக்காக தமிழகத்திலும் சென்னை மற்றும் கோவை நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒரே நெட்வொர்க் வசதி:
ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும் .அவற்றினை கண்காணிக்க கேமராக்கள் , வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் .
கட்டிடமே செய்து விடும்:
இதன் மூலம் நீங்கள் ஒரு விளக்கை அணைக்க மறந்துவிட்டாலும் உங்களின் வீடோ, அலுவலக கட்டிடமோ உங்களுக்காக அந்த வேலையை செய்து முடிக்கும் . உங்கள் கார்கள் உங்களுக்கு டிராபிக் இல்லாத இடமாக பார்த்து பார்க் செய்திட உதவும் .
மென்பொருள் தேவை அதிகம்:
இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் பங்கு கொள்ளும் பல முன்னணி நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க பல மென்பொருட்களை உருவாக்கி கொண்டே இருக்க வேண்டியது அவசியம் .
டிராபிக் எங்கு அதிகம்:
இந்த ஸ்மார்ட் சிட்டி டெக்னாலஜி மூலம் வண்டிகளின் எண்ணிக்கையை குறித்து வைத்து எந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆக போகிறது என முன் கூட்டியே கணித்து விடும் . அதற்கேற்ப அனைத்து பணிகளையும் மாற்றி டிராபிக் ஜாம் இல்லாமல் செய்து விடுவார்கள் கண்காணிப்பு அதிகாரிகள் .
தண்ணீருக்கு ஸ்மார்ட் மீட்டர்:
மேலும் தண்ணீர் எல்லாம் ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கிடப்படும் . இதன்மூலம் பயனாளர்கள் தங்களின் தண்ணீர் பயனீட்டு அளவை அவர்களே பார்த்துக் கொள்ள முடியும். மேலும் அதை மற்ற மக்களின் பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம் .
சீன நகரங்களில்:
முன்னதாக, சீனாவில் டியான்ஜின் எகோ சிட்டி , சுஃஷோ , குயங்ஷோ , ஸ்செகுசான் ஆகிய 4 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பணிகள் முடிய பலவருடங்களுக்கு மேல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.