ராம் ரஹீமுக்கு உடனே கைதி டிரஸ்ஸை மாட்டுங்க.. ஒரு சலுகையும் கூடாது.. அதிரடி தீர்ப்பு!
பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராம் ரஹீமை சிறையில் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சன்டிகர்: சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ராம் ரஹீமுக்கு உடனடியாக கைதிகளுக்கான ஆடையை வழங்க வேண்டும் என்றும் அவருக்கென எந்த வித தனி சலுகையும் காட்டப்பட கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-இல் தனது ஆசிரமத்தில் சீடர்களாக வந்த இரு பெண்களை சாமியார் ராம் ரஹீம் சிங் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார் என்று அப்பெண்கள் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து கடந்த 25-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் தற்காலிக நீதிமன்றம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு தரப்பு வாதமும் நிறைவடைந்து நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது ராம் ரஹீம் தன்னை மன்னித்து விடுமாறு கைகூப்பியும், கதறி அழுதும் கேட்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை.
20 ஆண்டுகள்
இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தனது உடல்நிலை சரியில்லை என்று நீதிமன்றத்தை விட்டு வெளியே போக மறுத்தார்.
கருணை காட்டுங்கள்
தனக்கு கருணை காட்டவேண்டும் என்றும் கோரினார் ராம் ரஹீம். மேலும் தனது உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் மாநிலம்தான் அதற்கு முழு பொறுப்பு என்றும் கூறினார்.
Recommended Video
டோட்டலி ஃபிட்
நீதிமன்றத்துக்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் ராம் ரஹீமின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். அப்போது அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று சான்றிதழ் வழங்கினார் மருத்துவர்.
கைதி சீருடை
நீதிபதி ஜெகதீப் சிங் கூறுகையில், ராம் ரஹீமுக்கென எந்த வித சிறப்பு வசதிகளும் செய்து தரக் கூடாது. சக கைதிகளை எப்படி நடத்துகிறீர்களோ அப்படிதான் நடத்த வேண்டும். அவருக்கு உடனடியாக சிறை கைதி சீருடை தாருங்கள் என்றார்.