சீறும் சீனா: டோக்லாம் பீடபூமியில் என்னதான் பிரச்சனை?
எல்லையில் சீனா சீறிக் கொண்டு நிற்பதற்கு காரணம் டோக்லாம் பீடபூமி விவகாரம்தான்.
டெல்லி: 1962-ம் ஆண்டு யுத்தத்தை எதிர்கொள்வீர்கள் என இந்தியாவை மிரட்டும் அளவுக்கு பூடானின் டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் சீனா சீறிக் கொண்டு நிற்கிறது.
பூடானின் டோக்லாம் பீடபூமியை கபளீகரம் செய்துவிட வேண்டும் என துடிக்கிறது சீனா. ஆனால் இதை அனுமதித்தால் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி பிராந்தியத்தை விழுங்க தயங்காது; இது வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பெருநிலப்பரப்புடன் இணைக்கக் கூடிய பகுதி என்பது நமது ராணுவத்தின் நிலைப்பாடு.
மேற்கு மற்றும் வடக்கில் சீனாவுடன் 470 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது பூடான். கிழக்கு, தெற்கு, மேற்கில் இந்தியாவுடன் 605 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்கிறது பூடான்.
14 நாடுகளுடன் பஞ்சாயத்து
1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமிக்கும் வரையில் பூடானுக்கு எல்லை பிரச்சனையே இல்லை. சீனாவுக்கு 14 அண்டைநாடுகளுடன் எல்லை பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் தங்களது நாட்டுடன் சீனாவுக்கு எல்லை பிரச்சனை வராது என கருதியது பூடான்.
இந்தியா கட்டுப்பாட்டில்...
இந்நிலையில் பூடானும் சீனாவும் 1972-ம் ஆண்டு முதல் முறையாக எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. முன்னதாக 1959-ம் ஆண்டு பூடானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்புறவு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. அதனடிப்படையில் பூடான் வெளியுறவு விவகாரங்களில் இந்தியாவின் அறிவுறுத்தல்படி நடந்து கொள்ளவேண்டும்.
சீனாவின் நெருக்கடி
ஆகையால் சீனாவுடனான பேச்சுவார்த்தையை இந்தியாவின் ஆலோசனையின்படி பூடான் நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகள் 1984-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. ஆனால் சீனாவோ, இந்தியாவின் ஆலோசனையை கேட்காமல் பூடான் தனித்து பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என நெருக்கடி கொடுக்க தொடங்கியது. ஆனால் பூடான் இதனை நிராகரித்துவிட்டது.
கண்ணாமூச்சி ஆட்டம்
பின்னர் 1996-ம் ஆண்டு சீனா ஒரு ஆட்டத்தைத் தொடங்கியது. அதாவது தமது வசம் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை விட்டுக் கொடுக்கிறோம்... டோக்லாம் பகுதியை விட்டுக் கொடுத்தால் நிதி உதவியும் அளிக்க தயார் என்றது. ஆனால் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் ஆலோசனையை கேட்காமல் அப்படியெல்லாம் செய்ய முடியாது என பூடான் நிராகரித்துவிட்டது.
டோக்லாம்தான் இலக்கு
சீனாவைப் பொறுத்தவரையில் விட்டுக் கொடுப்பது போல் கொடுத்து டோக்லாம் பீடபூமியை கபளீகரம் செய்வதுதான் திட்டம் என்பதும் அம்பலமானது. பின்னர் 1998-ம் ஆண்டு பூடானுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை போட்ட நிலையிலேயே அந்த நாட்டின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது.
பூடானுக்கு உரிமை
2007-ம் ஆண்டு இந்தியா- சீனா நட்புறவு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அதில் பூடான் தமது வெளியுறவு கொள்கையை தாமே தீர்மானித்துக் கொள்ளலாம் என திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது பூடான் தமது கேகே மலைப் பகுதியை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தது. இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்தது.
ஆக்கிரமிப்பு சீனா
ஆனாலும் சீனாவுடனான பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை. கேகே மலைப்பகுதியை சீனா அதிகாரப்பூர்வமாக ஏற்க மறுத்தது. பூடானிடம் இருந்து மேலும் பல பகுதிகளுக்கும் சீனா உரிமை கோரியது.
திபெத் பீதியில் பூடான்
ஆனால் அதை பூடான் ஏற்றால் அந்த நாட்டின் 10% நிலப்பரப்பை இழக்க நேரிடும் என்பதால் அந்நாடு மறுத்துவிட்டது. விடாது கருப்பாக சீனாவும் பூடான் நிலப்பரப்பை விழுங்க தொடங்கியது. திபெத்துக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுமோ பீதியில் உறைந்து கிடக்கிறது பூடான்.
சிலிகுரிக்கு ஆபத்து
பூடானின் டோக்லமா பீடபூமியை கைப்பற்ற விட்டு விட்டால் அடுத்து சிலிகுரியை நோக்கி பாயத் தொடங்கும் சீனா என்பதால் நமது ராணுவமும் பூடானும் இணைந்து கடுமையாக எதிர்க்கின்றன. பூடானை ஆக்கிரமிக்க விடாமல் இந்தியா தடுக்கிறதே என்கிற ஆத்திரத்தில் சீனா, போர் மிரட்டல் விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.