புதிதாக சம்மனே அனுப்பாமல் சிபிஐ கைது செய்தது ஏன்?- நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதம்
டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ய வேண்டிய தேவையே எழவில்லை என்று பட்டியாலா நீதிமன்றத்தில் அவர் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் காவல் அளிக்க சிபிஐ கோரியது. ஆனால் 1 நாள் காவல் வழங்கியது நீதிமன்றம்.
இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று இரவு முழுக்க, மருத்துவர் பரிந்துரைப்படி, அவர் மருத்துவமனையில் இருந்ததாகவும், எனவே, சிபிஐயால் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷ்கர் மேத்தா தெரிவித்தார்.
எனவே கார்த்தி சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.
கார்த்தி சிதம்பரம் சார்பில் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வினோத வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் வாதிட்டதாவது: 2017 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ எந்த சம்மனும் அனுப்பவில்லை
புது சம்மன் எதுவும் வழங்காமல், கார்த்தியை கைது செய்யவேண்டிய அவசியம் என்ன வந்தது? கார்த்தியை கைது செய்தது ஏன் என சிபிஐ விளக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
மேலும், இந்திராணி முகர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படும், வாக்குமூலம் சில மீடியாக்கள் மூலமாக கசியவிடப்பட்டுள்ளதாக அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதை சிபிஐ வழக்கறிஞர், ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்தார்.
இதனிடையே, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ரகசிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஆதாரங்கள் திருப்தி அளித்தால் கார்த்தியை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பு கோரியுள்ளது.