பயணிகளின் காது, மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்.. ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது என்ன?
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பல பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது.
Recommended Video
மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பல பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் சிக்கியது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் ஆகும். மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இந்த விமானம் சென்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இதில் 30 பயணிகளுக்கு மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதற்கான விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக என்ன செய்வார்கள்
பொதுவாக விமானம் மேலே செல்ல செல்ல விமானத்தின் உட்பகுதியில் (கேபின் பிரஷர்) அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும். அதேபோல் வெளி புறத்திலும் அழுத்த மாற்றம் ஏற்படும். உட்புறத்தில் வெளிப்புற அழுத்தத்திற்கு ஏற்றவாறு அழுத்தத்தை தொடர வேண்டும். இதை கட்டுப்படுத்த பல்வேறு கருவிகள் விமானத்திற்குள் இருக்கும். இதை சரியாக கட்டுப்படுத்துவதன் மூலமே எவ்வளவு உயரம் சென்றாலும், உள்ளே பயணிகள் எளிதாக சுவாசிக்க முடிகிறது.
தவறு
இந்த நிலையில்தான், இந்த கேபின் பிரஷரை தொடக்கத்தில் விமானம் புறப்படும் முன் சரி செய்யாமல் விட்டு இருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு முறை விமானம் புறப்படும் முன்னும் சரியான அளவு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான், விமானத்திற்குள் சரியான காற்று அழுத்தமும், ஆக்சிஜனும் இருக்கும். ஆனால் ஜெட் ஏர்வேஸில் இன்று இதை செய்ய விமானிகள் மறந்து இருக்கிறார்கள்.
நடந்தது என்ன
இதனால்தான் உள்ளே இருந்த பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. தவறான அழுத்தம் காரணமாக உடலில் இருந்து ரத்தம் வெளியேறி இருக்கிறது. மொத்தமாக 30 பயணிகளுக்கு இப்படி காது, மூக்குகளில் இருந்து ரத்தம் வெளியேறி உள்ளது. இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
எப்போது நடக்கும்
பொதுவாக புதிதாக விண்வெளியில் நடக்க பயிற்சி எடுக்கும் போது விண்வெளி வீரர்களுக்கு இப்படி ரத்தம் வருவது வழக்கம். இது உடலில் ஏற்படும் சிறிய அழுத்த மாறுபாடு காரணமாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் நடக்க கூடியது. சரியான முதலுதவிகள் மூலம் இதை சரி செய்ய முடியும்.