இந்தியாவையே அதிரவைத்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கியின் பரபர பின்னணி!
மரணமடைந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி இந்தியாவையே தமது முறைகேடுகளால் அதிரவைத்தவர்.
பெங்களூரு: உடல்நலக் குறைவால் மரணமடைந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி இந்தியாவையே தமது முறைகேடுகளால் அதிரவைத்தவர்.
2001-ம் ஆண்டு.. நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது போலி முத்திரைத்தாள் மோசடி. போலியான முத்திரைத்தாள்களை அச்சடித்து நாடு முழுவதும் விநியோகித்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் தெல்கி.
இத்தனைக்கும் 1993-ம் ஆண்டு கான்பூர் ரயில் நிலையத்தில் சாதாரண வியாபாரியாக இருந்தவர்தான் இந்த தெல்கி. ஒருகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் துணையுடன் நாடு முழுவதும் போலி முத்திரத்தாள்களை விநியோகித்து தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தவர் தெல்கி.
123 வங்கி கணக்குகள்
2001-ல் அஜ்மீரில் பிடிபட்ட தெல்கி மீது 11 மாநிலங்களில் மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர். மும்பை, பெங்களூரு, சென்னை என நாட்டின் 18 நகரங்களில் 123 வங்கி கணக்குகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகளை வாங்கி குவித்திருந்தார் தெல்கி.
ரூ 202 கோடி அபராதம்
இந்த வழக்குகளில் 2007-ம் ஆண்டு தெல்கிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ202 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
எக்ஸ்போஸ் செய்த ரூபா
பெங்களூரு சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உச்சகட்ட சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்தார் தெல்கி. சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபாவால் சசிகலா, தெல்கி உள்ளிட்டோர் அனுபவித்து வந்த சலுகைகள் அம்பலமானது.
மருத்துவமனையில் மரணம்
இதையடுத்து தெல்கியின் சலுகைகள் பறிக்கப்பட்டன. இதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெல்கியின் உடல்நிலை படுமோசமாகியது. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தெல்கி இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.