போராட்டத்தை தொடரலாமா.. சக விவசாயிகளிடம் அய்யாகண்ணு கருத்துக் கேட்பு.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி 37 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளிடம் விவசாயி அய்யாகண்ணு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்டு வருகிறார்.
டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 37 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
நூதனப் போராட்டம்
இந்நிலையில் இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை நடத்தினார்கள். தங்களது சட்டையை கிழித்துக் கொண்டு சாலையில் ஓடுவது போன்று விவசாயிகள் போராட்டத்தை நடத்தினார்கள். கண்டதையும் தின்று கொண்டு பார்ப்பதற்கு பைத்தியம் போன்று வேடமிட்டு விவசாயிகள் சாலையில் ஓடியது பார்ப்பதற்கு கொடுமையாக இருந்தது.
கண்டு கொள்ளாத பாஜக
ஆனாலும், மத்திய அரசிற்கு விவசாயிகள் மீது எந்தவிதமான இறக்கமும் இல்லாமல் அலட்சிய போக்குடனேயே நடந்து வருகிறது. தமிழகத்தின் பாஜக தலைவர்களும் தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தி பேசி வருகின்றனர். வகை வகையான போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு பயிர்கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
கருத்துக் கேட்பு
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் மனநிலையை அறிவதற்காக விவசாயி அய்யாகண்ணு கருத்துக் கேட்டறிதலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதா அல்லது நிறுத்திக் கொள்வதா என சக விவசாயிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
முடிவு
போராட்டத்தை நிறுத்திக் கொள்வதா அல்லது தொடர்வதா என்பது குறித்து விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இத்தனை நாட்கள் போராடியதற்கு என்ன பலன்? என்னென்ன கஷ்டங்கள் எதிர் கொள்ளப்பட்டன என்பது குறித்தெல்லாம் ஆலோசனையில் பேசப்பட்டு வருகிறது. இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.