தேர்தல், ஆளுநர், உச்ச நீதிமன்றம்... கர்நாடகாவில் இனி அடுத்து என்ன?
கடந்த ஐந்து நாட்களாக பரபரப்பான காட்சிகள் நிலவி வந்த கர்நாடகாவில், இனி இயல்பு நிலையே இருக்கும்.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து பரபரப்பாகவே ஒவ்வொரு விநாடியும் நகர்ந்தது. அதற்கு இன்றுடன் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு 12ம் தேதி தேர்தல் நடந்தது. 15ம் தேதி காலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து இன்று மாலை 4 மணி வரை தொடர்ந்து பரபரப்பு காட்சிகளே கர்நாடகாவில் அரங்கேறியது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆளுநர் மாளிகைக்கு காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களும், பாஜக தலைவர்களும் படையெடுத்தனர்.
கடைசியில் பாஜகவின் எடியூரப்பாவை ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதனிடையில், எம்எல்ஏக்களை வேட்டையாடுவதை தடுக்க ரிசார்ட்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விடிய விடிய வாதங்கள் நடந்தன. எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் அதற்கடுத்து, இன்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையில், எம்எல்ஏக்கள் கடத்தல், பணம் கொடுப்பதாக பேரம் என்று பலவகை முயற்சிகள் ஒருபுறம் நடந்தன. மற்றொரு புறம், சீனியாரிட்டியை புறந்தள்ளி, போப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எடியூரப்பா விலகினார்
அவருடைய நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இவ்வாறு பல்வேறு பரபரப்பு காட்சிகள் நடந்த நிலையில், பெரும்பான்மையை கோராமலேயே, முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகியுள்ளார்.
இனி என்ன நடக்கும்
கடந்த ஐந்து நாட்களாக கர்நாடகா அரசியல், உச்ச நீதிமன்றம், ஆளுநரின் பங்கு முக்கியமாக இருந்தது. ஒரு பக்கம் அரசியல் விளையாட்டுகளும் நடந்தன. இனி கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் என்பதே பலருடைய கேள்வியாக இருக்கும்.
புதிய அரசு பதவியேற்பு
காங்கிரஸ் ஆதரவுடன் மஜதவின் குமாரசாமி, ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதை ஏற்று, ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் அழைப்பு விடுப்பார். ஆளுநர் குறிப்பிடும் நாளில், சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போதைய நிலையில், இவ்விரு கட்சிகளும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இரு கட்சிகளுக்கும் 14 அமைச்சர் பதவி என்பது முடிவாகி உள்ளது.
இனி அரசியல் மட்டுமே
துணை முதல்வர் பதவி, யாருக்கு எந்தெந்த அமைச்சர் பதவி என்பது குறித்து இனி இந்தக் கட்சிகள் இடையே ஆலோசனை நடக்கும். அழைப்பு விடுப்பது, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதுடன் ஆளுநரின் பங்கு முடிந்து விடும். இனி உச்ச நீதிமன்றத்தையும் நாட வேண்டிய அவசியமில்லை. அடுத்து கர்நாடகாவில் நடக்க உள்ளது, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தை மற்றம் ஆட்சி அமைப்பதுதான்.