'ஜெய்சங்கர்' யானை, 'கரடி' செந்தில்.. டெல்லி உயிரியல் பூங்காவில் நடமாடும் தமிழ் நடிகர்கள்!
டெல்லி: டெல்லி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பலவற்றிற்கு தமிழ் நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன.
டெல்லியில், சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தேசிய உயிரியல் பூங்கா. இங்கு பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இவற்றைப் பார்ப்பதற்கு என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
தேசிய விலங்குகள் சட்டப்படி வன விலங்குகளை வீட்டு விலங்குகள் போல் பழக்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனபோதும், விலங்குகளை தனித்து அடையாளம் காண அவற்றிற்கு பெயரிட்டு பூங்கா ஊழியர்கள் அழைத்து வருகின்றனர்.
அந்தவகையில், டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளில் சிலவற்றிற்கு தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகளின் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளது.
விஜய்...
கடந்த மாதம் டெல்லி உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவர் ஒருவரை கடித்துக் கொன்றதே வெள்ளைப் புலி, அதற்கு ஊழியர்கள் வைத்த பெயர் விஜய். அதன் ஏழு மாத ஆண் குட்டியின் பெயர் சரவணன்.
ஜெய்சங்கர்...
அதேபோல், ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானை ஒன்றிற்கு ஜெய்சங்கர் என்றும், மற்றொரு யானைக்கு சிவாஜி கணேசன் என்றும் பெயரிடப் பட்டுள்ளதாம்.
கரடி பெயர் செந்தில்...
மஞ்சள் புலிக்கு ஸ்ரீபிரியா என்றும், மற்றொரு பெண் புலிக்கு அனுராதா என்றும், கரடிக்கு செந்தில் என்று பெயர் வைத்துள்ளார்களாம் பூங்கா ஊழியர்கள்.
அடையாளத்திற்காக...
இது தொடர்பாக இந்த உயிரியல் பூங்கா விலங்குகளுக்கான மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் பன்னீர் செல்வம் கூறுகையில், "தேசிய விலங்குகள் சட்டப்படி வன விலங்குகளை வீட்டு விலங்குகளை போல் பழக்கக்கூடாது. என்றாலும் அதைப்போல் குறைந்தபட்சம் பெயர் வைத்தால்தான் அவற்றை எங்களால் அடையாளப்படுத்தி பார்க்கமுடிகிறது. விலங்குகளின் பயிற்சியாளர்கள் அவற்றின் பெயரை சொல்லி அழைக்கும் போது, அவை திரும்பிப் பார்க்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிங்கக்குட்டி...
மேலும், இதற்கு உதாரணமாக பழைய சம்பவம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதாவது முன்பொரு முறை "சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்ந்து வந்த ஒரு சிங்கக்குட்டி ஒருநாள் இரவு மருத்துவமனையின் காட்டில் புகுந்து ஓடி விட்டது. இருளில் எவ்வளவு தேடியும் இது சிக்கவில்லை. பிறகு அந்த சிங்கக் குட்டியின் பயிற்சியாளர் அதன் பெயரைச் சொல்லி அழைத்தபோது, ஒரே குரலுக்கு திரும்பிவிட்டது" என்றார்.
அரசியல் பெயர்கள்...
நடிகர்கள் பெயர்கள் மட்டுமில்லை. இங்கே சில விலங்குகளுக்கு அராசியல் ரீதியாகவும் பெயர் சூட்டப் பட்டுள்ளதாம்.
அஞ்சுகம்...
மத்திய வனத்துறை அமைச்சராக இருந்த போது இந்த உயிரியல் பூங்காவிற்கு வந்த ராசா, அங்கிருந்த விலங்கு ஒன்றிற்கு திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தின் பெயரை வைத்தாராம்.
ரோஹன்...
அதேபோல், ஹைதராபாத்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்ட ஆசிய சிங்கத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் வழிப் பேரனான ரோஹன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.