ரூ1.30 கோடியுடன் தினகரனின் புரோக்கர் சுகேஷ் டெல்லியில் சிக்கியது எப்படி? எப்.ஐ.ஆரில் பரபர தகவல்கள்!
டிடிவி தினகரனின் புரோக்கர் சுகேஷ் சிக்கியது எப்படி என்பது தொடர்பாக டெல்லி போலீஸின் எப்.ஐ.ஆரில் பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
டெல்லி: டெல்லியில் எம்.பி. என பொய் சொல்லி நடமாடிய தினகரனின் புரோக்கர் சுகேஷ் சிக்கியது எப்படி என டெல்லி போலீஸின் எப்.ஐ.ஆரில் பரபர தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து மீட்பதற்காக தினகரனின் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் டெல்லியில் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ1.3 கோடி புதிய ரூ2,000 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் எப்.ஐ.ஆரில் சுகேஷ் சிக்கியது எப்படி என்பதை டெல்லி போலீசார் விவரித்துள்ளது.
பல வழக்குகள்
அந்த எப். ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூரைச் சேர்ந்த 27 வயது சுகேஷ் பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியவர். பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சுகேஷ் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போலீசுக்கு தகவல்
கடந்த ஏப்ரல் 15-ந் தேதியன்று டெல்லி போலீசுக்கு சுகேஷ் பற்றிய தகவல்கள் கிடைத்தன. டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எண் 263-ல் பெருமளவு பணத்துடன் அவர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
தினகரனுக்காக புரோக்கர் வேலை
அத்துடன் சுகேஷ் தம்மை ஒரு எம்.பி. என கூறிக் கொண்டு பென்ஸ் காரில் வந்ததாகவும் தகவல் கிடைத்தது. அதிமுக அம்மா அணியின் தினகரனுடன் சுகேஷ் தொடர்பில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்க ரூ50 கோடிக்கு அவரிடம் தினகரன் பேரம் பேசியிருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.
கத்தை கத்தையாக பணம்
இதையடுத்து சுகேஷ் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போலீசார் சென்றனர். அந்த அறையில் சோதனை நடத்திய போது தம்மிடம் பணம் எதுவுமே இல்லை என சுகேஷ் கூறினார். இருப்பினும் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஒரு பையில் ரூ2,000 நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தன.
ரூ1.30 கோடி சிக்கியது
இதன் மொத்த மதிப்பு ரூ1.30 கோடி. இந்த பணமும் சுகேஷின் பென்ஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுகேஷ் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.