"2002 குஜராத் கலவரம்.. அவங்களுக்கு தக்க பாடம் கற்பித்தோம்.." மத்திய அமைச்சர் அமித் ஷா பரபர பேச்சு
காந்திநகர்: குஜராத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி இப்போது நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பாஜக ஆட்சி தான் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு, டிச.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
நம்முடையது அடிமை வரலாறு அல்ல.. அடிமைப்படுத்த நினைத்தவர்களை அலறவிட்ட வரலாறு.. குஜராத்தில் மோடி பேச்சு
குஜராத்
கடந்த சட்டசபைத் தேர்தலில் குஜராத்தில் பாஜகவால் 99 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 77 இடங்களில் வென்றது. மாநில பாஜக அரசுக்கு எதிராக அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், கடந்தாண்டு இறுதியில் தான் குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி நீக்கப்பட்டு பூபேந்திர படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இப்போது மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க முயன்று வருகிறது.
அமித் ஷா
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால், இதைக் கவுரப் பிரச்சினையாகவும் பாஜக பார்க்கிறது. இதனால் பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பாஜகவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசு மீதான அதிருப்தியைத் தாண்டி, மோடி பிம்பம் தங்களைக் காப்பாற்றும் என நம்புகிறார்கள். இதற்கிடையே நேற்று கேடா மாவட்டத்தின் மஹுதாவில் பொதுமக்களிடையே பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
வகுப்புவாத கலவரம்
குஜராத்தில் நடந்த வகுப்புவாத கலவரங்களுக்குக் காரணமானவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்றும் அதன் பிறகு 22 ஆண்டுகளாக மாநிலம் அமைதியாக இருப்பதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது (1995க்கு முன்) வகுப்புவாத கலவரங்கள் தலைவிரித்தாடியது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் காங்கிரஸ் ஒருவரையொருவர் சண்டையிடத் தூண்டியது. இதுபோன்ற கலவரங்கள் மூலம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்தியது.
2002 கலவரம்
இதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்கே அது அநீதி விளைவித்தது. இந்த பரூச் நகரில் கூட பல கலவரங்கள், வன்முறைகள் நடந்துள்ளன. அப்போது இங்கு உட்சபட்ச குழப்பம் நிலவியது. இந்த குழப்பத்தால் குஜராத்தில் வளர்ச்சியே சுத்தமாக இல்லாமல் போனது. 2002ஆம் ஆண்டில் கூட அவர்கள் வகுப்புவாத வன்முறையில் ஈடுபட முயன்றனர்.. அவர்களுக்கு நாங்கள் பாடம் கற்பித்தோம். வன்முறையில் ஈடுபட முயன்றவர்களைச் சிறையில் அடைத்தோம்.
பிரச்சினை இல்லை
அதன் பிறகு கடந்த 22 ஆண்டுகளில் ஒரு முறை கூட மீண்டும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை. அடிக்கடி மதக்கலவரம் நடக்கும் பகுதிகளிலும் கூட பாஜக அமைதியை நிலைநாட்டி உள்ளது" என்று அவர் தெரிவித்தார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பேட்டி தீ வைக்கப்பட்டதில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் குஜராத்தில் மூன்று நாட்கள் நடந்த கொடூர வன்முறையில் 1,000க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
பிரதமர் மோடி
அப்போது கலவரத்தைத் தடுக்க மாநில போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தது. மேலும், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி மீதும் கூட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இது தொடர்பான விசாரணையில் நரேந்திர மோடி எந்த தவறும் செய்யவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இது தொடர்பான வழக்கு ஒன்றில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.