அம்பலமான வினோத் ராய் அபாண்ட பொய்.. பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா?
Recommended Video
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி இழப்பு என போலியான தகவலை அளித்த முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய்க்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கையளித்தார்.
அந்த அறிக்கையில், இழப்பு மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
பெரிய குற்றச்சாட்டு
இவ்வாறு ஒரு பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டை அதுவரை இந்தியா பார்த்ததே இல்லை. பலராலும் இந்த ஊழல் கணக்கை எழுத்தால் கூட எழுத முடியவில்லை. ஒரு பிரபல ஆங்கில செய்தித்தாள், இவர் கூறிய ஊழல் கணக்கின் வீரியத்தை சொல்ல, எண்ணுக்கு பின்னால், பூஜ்யம், பூஜ்யம் என முழுபக்க அளவில் எழுதி தலைப்பிட்டது.
மக்கள் மனதில் கொந்தளிப்பு
வினோத்ராயின் இந்த தகவலால், நாட்டில் பெரும் குழப்பமே உருவானது. இவ்வளவு பெரிய ஊழல்வாதிகளா நம்மை ஆண்டார்கள் என்பது போல மக்கள் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டது. எனவேதான் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்பேரில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது.
பொய் குற்றச்சாட்டு
இதோ இன்று தீர்ப்பு வெளியாகிவிட்டது. குற்றச்சாட்டுகள் பொய் என நீதிமன்றம் கூறிவிட்டது. உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் ஒரு வழக்கு என்பதால் நீதிபதி ஓ.பி.ஷைனி எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் தீர்ப்பை வழங்கியிருக்க வாய்ப்பே இல்லை. நீண்ட காலம் எடுத்துக்கொண்டு நன்கு பரிசீலனை செய்து இந்த தீர்ப்பை வழங்கினார்.
என்ன தண்டனை
இந்த நிலையில்தான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, காங்கிரஸ், திமுக ஆகிய இருபெரும் அரசியல் கட்சிகள் மீது மிகப்பெரிய களங்கத்தை கற்பித்த வினோத் ராய்க்கு என்ன தண்டனை என மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
பிசிசிஐ நிர்வாக குழு தலைவர்
இந்த வினோத் ராய்தான் இப்போது பிசிசிஐ நிர்வாக குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திறமையானவர் என நம்பி, உச்சநீதிமன்றம் இவரை அந்த பதவியில் அமர வைத்தது. ஆனால் தனது குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில் இப்போது அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மானநஷ்டம்
தனி நபரை மற்றொருவர் அவதூறாக பேசினாலே மானநஷ்ட வழக்கு தொடர முடியும். இழப்பீடு பெற முடியும். வினோத் ராயோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முக்கிய புள்ளிகள் மீது பெரும் களங்கத்தை அள்ளி வீசியவர். இவர் மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்தே இனியும் குழப்பவாதிகள், உள்நோக்க வாதிகள் உருவாவது தடுக்கப்படும்.