சித்தராமையா முதல்வரானால் ஆதரவு இல்லை.. மஜத எதிர்ப்பால் கலக்கத்தில் காங். அடுத்து என்ன நடக்கும்?
சித்தராமையாவை சமாதானப்படுத்த அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி அளிக்க கூடும். பின்னர், மஜத ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கர்நாடக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. கடந்த சனிக்கிழமை மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் சொல்வது ஒன்றைத்தான். அது, காங்கிரசோ, பாஜகவோ எந்த ஒரு முக்கிய கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறப்போவதில்லை என்பதுதான் அது.
ஏறத்தாழ அனைத்து கருத்து கணிப்புகளுமே மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 20 முதல் 35 தொகுதிகள் வரை கைப்பற்றும் என ஆரூடம் கூறுகின்றன.
இரு கட்சிகளுக்கும் ஆதரவு
இதன் காரணமாகத்தான் மஜத இப்போது கிங் மேக்கராக பார்க்கப்படுகிறது. அந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே ஆட்சியமைக்க முடியும். மதசார்பற்ற ஜனதாதளத்தை பொறுத்தளவில், இதற்கு முன்பு, காங்கிரஸ்ஸ மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆதரவு அளித்து கூட்டணி அரசில் பங்கேற்றுள்ளது என்பதால், அதன் முடிவை இப்போதே, உறுதியாக கூறிவிட முடியாது.
வரலாறு சொல்லும் பாடம்
காங்கிரசின் தரம்சிங் முதல்வராக இருந்தபோது ஆதரவு அளித்த மதசார்பற்ற ஜனதாதளம், குமாரசாமி முதல்வராக இருந்தபோது பாஜக ஆதரவை பெற்றுக்கொண்டு ஆட்சி நடத்தியது. இருப்பினும் பாஜகவுடனான கூட்டணி ஆட்சியின்போது, மஜத தலைவர் தேவகவுடாவுக்கு அதில் விருப்பம் இல்லாததை போல காட்டிக்கொண்டார். மதசார்பற்ற ஜனதாதளம் என பெயரை வைத்துக்கொண்டு பாஜகவுடன் தனது மகன் குமாரசாமி கூட்டணி அமைத்தது தவறு என்றார். இருந்தாலும் குமாரசாமி ஒப்பந்தப்படி 20 மாதங்கள் முதல்வராக இருந்தார். எடியூரப்பா தனது 20 மாத காலத்திற்கான ஆட்சியை கேட்டபோது மஜத ஆதரவை வாபஸ் பெற்றது.
காங்கிரசே முதல் சாய்ஸ்
இம்முறையும் மஜத கிங் மேக்கராக இருப்பதால், அதன் முதல் சாய்ஸ் காங்கிரசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி செய்வதுதான் அக்கட்சி கூறிக்கொண்டிருக்கும் மதசார்பின்மை கொள்கைக்கு உகந்ததாக இருக்கும் என கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கு பெரும் தடையாக இருப்பது சித்தராமையா. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சித்தராமையாவே மீண்டும் முன்னிறுத்தப்பட்டால் அதற்கு தேவகவுடா ஒப்புக்கொள்ள மாட்டார்.
சித்து, கவுடா பகை
சித்தராமையா, மஜத கட்சியிலிருந்து தேவகவுடாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் சென்றவர். இருவருக்கும் ஜென்ம பகை. இதுதான் காங்கிரசுக்கு ஆதரவு கரம் நீட்டுவதில் மஜதவுக்கு இருக்கும் தயக்கத்திற்கு காரணம். சித்தராமையாவை முதல்வராக்க கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரசுக்கு மஜத ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், இதைத்தான் காங்கிரசில் உள்ள பிற தலைவர்களும் விரும்புவார்கள் எனவும் கூறுகிறார் அரசியல் பார்வையாளர், சந்தீப் சாஸ்திரி.
காங்கிரசில் கடுப்பு
2005ல்தான் காங்கிரசில் சேர்ந்தார் சித்தராமையா. காங்கிரசில் வந்து சேர்ந்த குறுகிய காலத்தில், அங்கிருந்த சீனியர் தலைவர்களுக்கு கிடைக்காத முதல்வராகவும் வாய்ப்பு சித்தராமையாவுக்குதான் (2013ல்) கிடைத்தது. எனவே, கர்நாடக காங்கிரஸ் சீனியர்கள் ரொம்ப காலமாகவே சோனியாகாந்தியின் இந்த முடிவால் கடுப்பில்தான் உள்ளனர். அவர்களும் தேவகவுடாவிற்கு தூபம் போட்டு, சித்துவிற்கு எதிராக அணி திரள வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சித்தராமையா ஆதரவாளர்கள் கோபம்
அதேநேரம், சித்தராமையாவை பகைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியாது. அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரிசார்ட்டில் தஞ்சமடைந்தால், ஆட்சிக்கு தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு, ஆட்சியை கலைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு அல்வா போன்ற வாய்ப்பாக இது அமைந்துவிடும். அல்லது, பாஜகவை ஆட்சியமைக்க அவர் அழைப்புவிடுத்துவிடுவார். இதனால், சித்தராமையாவை சமாதானப்படுத்த அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி அளிக்க கூடும். பின்னர், மஜத ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கர்நாடக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.