கர்நாடகா தேர்தல்: தொங்கு சபை அமைந்தால் கவர்னர் முடிவு என்னவாக இருக்கும்
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் தொங்கு சபை அமையும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அமைந்தால், கவர்னரின் செயல்பாடு யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற விவாதம் துவங்கியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவரை வந்துள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், ஆளும் காங்கிரஸ் மற்றும்
பாஜகவுக்கு மாறி மாறி முன்னிலை கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் கவர்னரின் செயல்பாடு யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளது.
தேர்தலுக்கு முன் நடத்திய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பல தனியார் டிவிக்கள், அமைப்புகள் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன.
அதே நேரத்தில் சில அமைப்புகள், டிவிக்களின் கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தனிப் பெரும் கட்சியாக பாஜக முன்னேறினாலும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
கௌடா என்ன செய்வார்
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கௌடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக அமைவதற்கு வாய்ப்பும் உள்ளது. சமீபத்தில் கௌடாவும் பிரதமர் மோடியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புகழந்து தள்ளியது இதை உறுதி செய்கிறது. ஆனால் தேவே கௌடாவின் மகன் குமாரசாமி என்ன முடிவு எடுப்பார் என்பது தற்போதைக்கு தெரியவில்லை.
யாருக்கு சாதகம்
ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் அல்லது தேர்தலுக்குப் பிறகு கட்சிகள் இடையே கூட்டணி அமைந்தால், யாரை ஆட்சிக்கு அழைப்பது என்பது குறித்து கவர்னரே முடிவு எடுப்பார். தற்போது கர்நாடக கவர்னராக வாஜூபாய் ரூடாபாய் வாலா உள்ளார். பாஜகவைச் சேர்ந்த இவர், குஜராத்தில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
இதற்கு முன் நடந்தவை
கடந்தாண்ட நான்கு ஆண்டுகளில் பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடித்தது. கோவாவில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வென்றபோதும் நடுஇரவில் மற்ற கட்சிகளை வளைத்து பாஜக அவசர அவசரமாக ஆட்சி அமைந்தது.
மணிப்பூரிலும் தொடர்ந்தது
அதேபோல் கடந்தாண்டு மணிப்பூரிலும் 60 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 28ல் வென்றது. ஆனால் 21ல் வென்ற பாஜக ஆட்சி அமைத்தது. 2016ல் அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. இந்த சந்தர்ப்பங்களின்போது, அந்தந்த மாநில கவர்னர்கள் எடுத்த முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருந்தது. தற்போது கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்தவர் கவர்னராக இருப்பதால், தொங்கு சட்டசபை அமைந்தால் அவருடைய முடிவு எப்படி இருக்கும் என்பதற்கான விவாதங்கள் துவங்கியுள்ளது.