என்னண்ணே இப்படி சொன்னா எப்படி.. ரியாக்ஷன் காட்டாம ஆக்ஷனில் இறங்குங்க!
டெல்லி: வாட்ஸ் ஆப் மூலம் வதந்திகள், போலியான செய்திகள் பரவுவதை கேள்விப்பட்டு தங்களுக்கு அதிர்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம்.
வாட்ஸ் ஆப் மூலம்தான் உலகில் பாதிப் பொய்கள், வதந்திகள் பரவுவது உலகறிந்த விஷயம். ஆனால் அது தெரிந்தும் கூட அடடே அப்படியா ரொம்ப வருத்தமா இருக்கே என்பது போல சாதாரணமாக கருத்து தெரிவித்துள்ளது வாட்ஸ் ஆப்.
வதந்திகளைக் கண்டறிய உரிய முறையில் திட்டமிடப்படும் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அது எதையும் செய்ததாக தெரியவில்லை. வாட்ஸ் ஆப் மூலம் வதந்திகள், பொய்யான செய்திகள் பரவி வருவதைத் தொடர்ந்து மத்திய அரசு இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.
அதில் வாட்ஸ் ஆப் பொது மக்களிடையே சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் குலைவதை அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான வழிமுறைகளை வாட்ஸ்ஆப் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்துள்ளது.
வதந்திகள்
அதில், போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளை பரவ விடாமல் தடுக்க தேவையான வழிமுறைகளை வாட்ஸ் ஆப் யோசித்து வருகிறது. அதில் முக்கியமானது ஒரு செய்தியை யார் பார்வர்ட் செய்கிறார் என்பதை கண்காணிப்பது. யாரிடமிருந்து அந்த செய்தி வந்தது என்ற விவரங்களை இதன் மூலம் அறிய முடியும்.
நாங்களும் ஷாக் ஆயிட்டோம்
மத்திய அரசைப் போலவே நாங்களும் கூட வதந்திகள் பரவுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். அதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். இது மிகப் பெரிய சவால். இதற்கு அரசாங்கம், பொதுமக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமீபத்தில் குரூப் சாட்டுகளில் தேவையில்லாத செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் போதிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
புதிய உத்திகள்
குரூப்பை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல சில உத்திகளை அமல்படுத்தி வருகிறோம். இதெல்லாம் வதந்திகள், தவறான செய்திகள் பரவுவதை ஓரளவு தடுக்க உதவும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கியுள்ளது.
பார்வர்டுகளை கட்டுப்படுத்தலாமே
எல்லாம் சரி, வர்ற மெசேஜை எல்லாம் சர் சர்ரென பார்வர்ட் செய்வதற்கு மின்னல் வேகத்தில் கிடுக்கிப் போடாமல் இப்படி சாவகாசமாக வாட்ஸ் ஆப் பேசிக் கொண்டிருப்பது ஏன். சமீபத்தில் குழந்தை கடத்தல் என பரவிய வதந்தியால் இந்தியா முழுவதும் பலர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்தது. இன்னும் கூட அதுதொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஏன் உளவு பார்க்க முடியாது
மேலும் வாட்ஸ் ஆப் சாட்களை மற்றவர்களால் பார்க்க முடியாது. ஏன் எங்களால் கூட அதை உளவு பார்க்க முடியாது என்று வாட்ஸ் ஆப் கூறுகிறது. இதை அது மாற்றியாக வேண்டும். ஏனென்றால் சீனாவில் இதுபோல எல்லாம் தன்னிச்சையான ரூல்ஸ்கிடையாது. அரசுக்குட்பட்ட விதிகள்தான் அங்கு உள்ளன. எனவே வாட்ஸ் ஆப்பும் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டாக வேண்டும்.
வாட்ஸ் ஆப்பின் பொறுப்பு
வாட்ஸ் ஆப் நினைத்தால் பல விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்தியாக வேண்டும். காரணம் இந்தியா போன்ற நாடுகளில் வதந்திகள்தான் படு வேகமாக பரவுகின்றன. வாட்ஸ் ஆப் பேஸ்புக்கில் வருவதை வேதமாக கருதும் கூட்டம் அதிகமாகவும் உள்ளது. எனவே இதில் வாட்ஸ் ஆப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.