வாட்ஸ்அப்பில் மதம் குறித்து சர்ச்சை கருத்து... குரூப் அட்மின், உறுப்பினர் மீது வழக்கு
முசாபர்நகர்: உத்திர பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக வாட்ஸ் அப் குரூப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ளது கந்த்லா டவுன் பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த பரம் சைனி என்பவர் வாட்ஸ் அப்பில் குரூப் ஒன்றை உருவாக்கி, அதில் செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்தக் குரூப்பில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், பரம் சைனி மற்றும் அவரது வாட்ஸ் அப் குழு உறுப்பினரான தீபக் ஆகியோர் மீது கந்த்லா போலீசில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்திய தண்டனை சட்ட பிரிவு 153 (மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை தூண்டுதல், நல்லிணக்கத்துக்கு கேடு விளைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல்), 153 ஏ, மற்றும் 295 ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகளை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.