காவிரி வழக்கில் வாதாடமாட்டேன் என்று கூறிய கர்நாடக வழக்கறிஞர் நாரிமன்.. பாராட்டிய உச்சநீதிமன்றம்
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்குமாறு கர்நாடக அரசுக்கு எச்சரிக்கைவிடுத்து, காவிரி வழக்கில் இருந்தே வெளியேறுவேன் என மிரட்டல் விடுத்தவர் அம்மாநிலத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன்.
தமிழகம்-கர்நாடகா நடுவேயான காவிரி பங்கீடு வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்தின் பங்கான 192 டிஎம்சி என்பது 177.25 டிஎம்சி தண்ணீராக குறைக்கப்பட்டது. இதனால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்கள் தீர்ப்பின்போது பாலி.நாரிமனின் சுப்ரீம் கோர்ட் மீதான மதிப்பை குறிப்பிட்டு புகழ்ந்துள்ளது.
2016ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, தமிழகத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி நீரை திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தண்ணீர் விட முடியாது என அறிவித்தார்.
இதையடுத்து, செப்டம்பர் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நாரிமன் 2 கடிதங்களை சமர்ப்பித்தார். அதில், தனக்கும் கர்நாடக மாநில அரசுக்கும் நடந்த உரையாடல்களை குறிப்பிட்டார். சித்தராமையாவின் முடிவுக்கு நாரிமன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்காவிட்டால் வழக்கில் வாதிடுவதில்லை என அரசிடம் தெரிவித்துவிட்டதாகவும் நாரிமன் அப்போது தெரிவித்தார்.
இதைத்தான் இப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பாராட்டியுள்ளனர். நாரிமன் நீதிமன்றத்தின் மீதான மாண்பை பாதுகாக்கும் வகையில், நாரிமன் செயல்பட்டார் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எது எப்படியோ, வழக்கில் இருந்து விடுபடப்போவதாக மிரட்டிய நாரிமன் தலைமையிலான வழக்கறிஞர் குழு கடைசியில் கர்நாடகாவிற்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்துவிட்டது.