தாவூத் இப்ராகிமை சோட்டா ராஜன் போட்டு தள்ளி 10 வருஷம் ஆகியிருக்கனும்... முறியடித்த மும்பை போலீஸ்!!
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை 10 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னாள் கூட்டாளி சோட்டா ராஜன் கும்பல் கொலை செய்ய முயற்சித்த ஆபரேஷனை கடைசிநேரத்தில் மும்பை போலீஸ்தான் முறியடித்ததாக திடுக் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை நிழல் உலக நடவடிக்கைகளில் தாவூத்துடன் நெருக்கமாக இருந்தவர் சோட்டா ராஜன். ஆனால் 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பின்னர் இருவரும் பரம எதிரிகளாகினர்.
தாவூத்தின் மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தேசத்துக்கே எதிரானது என்பது சோட்டா ராஜனின் கருத்து. இதன் பின்னர் நிழல் உலக தாதாக்கள் மதத்தின் பெயரால் பயங்கரவாதிகளாக உருவெடுத்தனர்...
இதில் தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானின் உளவு அமைப்பு அரவணைத்துக் கொண்டது.. சோட்டா ராஜான் இந்துக்களின் நிழல் உலக தாதாவாக உருமாறினார். பங்காளிகள், பகையாளிகள் என்றான பின்னர் தாவூத் இப்ராகிம் கும்பலை அழித்தொழிக்க சோட்டா ராஜன் போட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை..
துபாயில் தாவூத் இப்ராகிம் கும்பலின் முக்கிய நபராக இருந்தவர் ஷரத் ஷெட்டி. தாவூத் வகையறாக்களின் துபாய் நடவடிக்கைகளின் மூளையாக இருந்த இந்த ஷரத் ஷெட்டியை சோட்டா ராஜன் கும்பல் போட்டுத் தள்ளியது.
அதேபோல் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக இருந்த நேபாள எம்.எல்.ஏ. தில்ஷாத் பெய்க், தாவூத் ஏஜெண்டுகள் பர்வேஷ் டாஅண்டா, காலித் மசூத், நேபாள கேபிள் ஆபரேட்டர் ஜமீம் ஷா என அடுத்தடுத்து தாவூத்தின் வலது, இடது கரங்களை சோட்டா ராஜன் கும்பல் பலியெடுத்தது.
இதன் உச்சமாகத்தான் 2005 ஆம் ஆண்டு தாவூத் கதையை முடிக்கும் ஆபரேஷனை சோட்டா கோஷ்டி மேற்கொண்டது. தாவூத் இப்ராகின் மகள் மக்ரூக்கின் திருமணத்துக்கு வரும் போது தாவூத்தை அழித்தொழிப்பது என்பதுதான் ஆபரேஷன்.
இதற்காக விக்கி மல்கோத்ரா, பரீத் தனாஷா ஆகியோரை களத்தில் இறக்கினார் சோட்டா ராஜன். இருவரும் தாவூத் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள கராச்சி போவது; மகள் திருமணத்துக்கு தாவூத் வரும் போது அங்கேயே சுட்டுக் கொல்வது என்பதுதான் ப்ளான். தாவூத் எத்தனை மணிக்கு அந்த இடத்துக்கு வருவார் என்ற தகவலும் கூட இந்த இருவரிடமும் இருந்தது.
ஆனால் இந்த ஆபரேஷனை மோப்பம் பிடித்த மும்பை போலீஸ் திடீரென விக்கி மல்கோத்ரா, பரீத் தனாஷா ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தது. இதனால் தாவூத்தை போட்டுத் தள்ளும் ஆபரேஷன் கைவிடப்பட்டது.
அன்றுமட்டும் இந்த ஆபரேஷன் நடந்திருந்தால் தாவூத் கதை 99% முடிந்திருக்கும் என்று இப்போதும் ஆதங்கப்படுகின்றனர் மும்பை போலீஸ் அதிகாரிகள்.
தற்போது தாவூத் இப்ராகிமுக்கு எதிரான வேட்டையில் சோட்டா ராஜன் ஒரு கருவியாக பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் தாவூத் தொடர்பான அப்டேட் தகவல்கள் சோட்டா ராஜனிடம் தற்போது இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.
சோட்டா ராஜன் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் போது தாவூத் தொடர்பான தகவல்கள்தான் சோட்டா ராஜனிடம் கேட்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த ஆண்டே சோட்டா ராஜன் கும்பல் சிதறிப் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனித்துவிடப்பட்ட நபராகத்தான் சோட்டா ராஜன் இருந்திருக்கிறார். சோட்டாவின் கூட்டாளிகளே தற்போது பகையாளிகளாகிவிட்டதாகவும் கூறுகின்றனர் உளவுத்துறை அதிகாரிகள். இதனால் தாவூத் இப்ராகிமிடமிருந்தும் புதிய எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து வாழ்வதற்கான தலைமறைவு வாழ்க்கையில்தான் சோட்டா மும்முரம் காட்டிவந்திருக்கிறார்.
ஆகையால் தாவூத் குறித்த உறுதியான, தெளிவான தகவல்கள் சோட்டா ராஜனிடம் இருக்கவே வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.