அன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் கண்ணீர்சிந்திய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்
பெங்களூர்: நாட்டின் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் முன்வைத்த கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் 2004-ம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றலானபோதும் டி.எஸ். தாக்கூர் கண்ணீர்சிந்தியதை நினைவுகூறுகின்றனர் பெங்களூரு பத்திரிகையாளர்கள்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 1994-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை நீதிபதியாக பணியாற்றினார் டி.எஸ். தாக்கூர். பின் 2004-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அவர் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
தாக்கூர் இடம் மாற்றம் செய்யப்பட்ட நாளன்று உயர்நீதிமன்ற வளாகத்திலும் பத்திரிகையாளர்களிடமும் இதுதான் முதன்மையான டாபிக்காக இருந்தது. அனைவருக்குமே தாக்கூரின் இடமாற்றம் வருத்தம் தரும் வகையில் இருந்தது.
இத்தனைக்கும் பத்திரிகைகள் மீதான வழக்குகளை விசாரித்த பெஞ்சுக்கு தலைமை வகித்தவரே டி.எஸ். தாக்கூர். அந்த பெஞ்சில்தான் முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, சபாஹித் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இருந்தபோதும் பத்திரிகையாளர்கள், தாக்கூரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என வேதனைப்பட்டனர்.
மேலும் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தாக்கூருக்கு பிரிவு உபசார விருந்து அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேச தாக்கூர் மைக் முன் வந்து நிற்கிறார். அந்த அரங்கமே நிசப்தத்தில் மூழ்குகிறது. கர்நாடகாவில் தாம் பணியாற்றிய 10 ஆண்டுகாலத்தைப் பற்றி விவரித்து பேசிக் கொண்டே இருந்தார் தாக்கூர்...
அவர் தமது பேச்சை முடிக்கும் போது கண்ணீர் சிந்தினார். அவரது இந்த உணர்ச்சிப் பெருக்கான நிலையை கண்டு அந்த அரங்கத்தில் கண்ணீர்சிந்தாதவர் எவருமே இல்லை என்கின்றனர் பெங்களூர் பத்திரிகையாளர்கள்.