டிபிஎஸ் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்துகையில் விஸ்கி கலந்த கூல்ட்ரிங்ஸ் குடித்த மாணவ, மாணவியர்
ஜோத்பூர்: ராஜஸ்தானில் 9ம் வகுப்பு மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொண்டு பள்ளிக்கு வந்து சக மாணவ, மாணவியருக்கு அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 9ம் வகுப்பு படித்த மாணவர் 2 பாட்டில் குளிர்பானத்தில் விஸ்கியை கலந்து செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். ஒரு பாட்டிலை தனது வகுப்பிற்கு வைத்துக் கொண்ட அவர் மற்றொரு பாட்டிலை பக்கத்து வகுப்பு மாணவ, மாணவியரிடம் அளித்துள்ளார்.
மாணவ, மாணவியர் விஸ்கி கலந்த குளிர்பானத்தை வகுப்பில் அமர்ந்து குடித்துள்ளனர். அந்த பாட்டில் மாணவியரிடமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த குளிர்பானத்தை குடித்த மாணவிகளில் ஒருவர் வகுப்பறையில் போதையில் நடனம் ஆடியுள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஆசிரியர் ஒருவர் பார்த்துவிட்டு பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது தான் விஸ்கி கலந்த பானத்தை அனைவரும் குடித்துள்ளனர். இது குறித்து அறிந்த பள்ளி முதல்வர் பி.எஸ். யாதவ் குறிப்பிட்ட மாணவனை அழைத்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அந்த மாணவர் பள்ளியை விட்டு நீக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர் நேற்று பள்ளி முன்பு கூடி நிர்வாகத்தின் பொறுப்பின்மையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.