பார்ரா.. மோடியையே சிரிக்க வச்சுட்டாரே இந்த எம்.பி!
ராஜ்யசபாவில் அனல் பறக்க நடந்த விவாதத்தின்போது இறுகிய முகத்துடன் காணப்பட்ட பிரதமர் மோடி, சமாஜ்வாடி எம்.பி. ஒருவரின் பேச்சைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தார்.
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நடந்த அனல் பறக்கும் விவாதத்தின்போது இறுகிய முகத்துடன் காணப்பட்ட பிரதமர் மோடி திடீரென ஒரு சிரிப்பு சிரித்தார். அவருடன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் சிரித்தார். அவர்களை சிரிக்க வைத்தவர் சமாஜ்வாடி கட்சி எம்.பியான நரேஷ் அகர்வல்.
படு சூடாக போய்க் கொண்டிருந்த விவாதத்தின்போது மோடியை சிரிக்க வைத்த நரேஷ் அகர்வால், இன்னொரு முறையும் மோடியைச் சிரிக்க வைத்தார்.
ராஜ்யசபாவில் இன்று ரூபாய் ஒழிப்பு தொடர்பான விவாதம் அனல் பறக்க நடந்தது. எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினர். அந்த விவாதங்களை பிரதமர் மோடி அமைதியாக, இறுகிய முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் பேசுகையில், அருண் ஜேட்லிக்குக் கூட தெரியாமல் இந்த முடிவை பிரதமர் எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். ஒரு வேளை பிரதமர், ஜேட்லியிடம் இதைக் கூறியிருந்தால் அவரை உடனே எங்களுக்குச் சொல்லியிருப்பார் என்றார். அதைக் கேட்டதும் மோடி கபகபவென சிரித்து விட்டார். அருகில் இருந்த ஜேட்லிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தொடர்ந்து பேசிய அகர்வால், இன்னொரு முறை குறிப்பிடுகையில், பிரதமர் அவர்களே உங்களது பாதுகாப்பு குறித்து கவலைப்படாதீர்கள். உ.பியில் அது ஏகமாகவே உங்களுக்குக் கிடைக்கும் என்று கூறியபோது மீண்டும் சிரித்தார் மோடி. (உ.பியில் சமாஜ்வாடி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது)
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி பேசுகையில், எனது உயிருக்கு கறுப்புப் பணக்காரர்களால் ஆபத்து உள்ளது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.