உதவி கேட்டு கடிதம் எழுதிய பள்ளிக்கு ரூ.76 லட்சம் நிதி அளித்த சச்சின் !
கொல்கத்தா: மேற்குவங்க பள்ளி ஒன்றுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவுமாறு எழுதிய கடிதத்தை அடுத்து, அந்த பள்ளிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல் சபை எம்பியாக உள்ளார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணமோயி சாஸ்தா ஷிக்சா நிகேதன் என்ற பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உதவிடுமாறு மாநிலங்களவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற வீரருமான சச்சின் டெண்டுல்கருக்குக் கடிதம் எழுதினர்.
இதையடுத்து தனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.76 லட்சம் வழங்கியுள்ளார். அவரது இந்த நிதி கடந்த நிதியாண்டில் அந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவிகளுக்கு சிறப்பு அறை உள்ளிட்ட புதிய கட்டடங்கள் அந்த பள்ளியில் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
தங்கள் கடிதத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த சச்சினுக்கு அந்த பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள பள்ளியின் தலைமையாசிரியர் உத்தம் குமார் மொஹந்தி, இந்த உதவியை எங்களால் நம்பவே முடியவில்லை நாங்கள் எங்கள் நன்றியை சொல்ல வார்த்தைகள் இல்லை. என்றார்.