"சாயா" நாயரைத் தெரியும்.. "தாதா" நாயரைத் தெரியுமா...?
மும்பை: ஒவ்வொருக்குள்ளும் ஒரு "டான்" முகம் இருக்கும். ஆனால் அந்த நினைப்பைத் தூண்டி விடும்போதுதான் அந்த நபர் தவறான பாதைக்குத் திரும்பிச் செல்கிறார்.. பாதை மாறிய பயணத்தையும் தொடங்குகிறார். இப்படித்தான் சிறு வயதிலேயே பாதை மாறியவர் சோட்டா ராஜன்.
இன்று 55 வயதாகும் சோட்டாராஜன், சாதாரண கள்ள டிக்கெட் விற்பனையாளராக தவறான பாதைக்குத் திரும்பியவர். அது படிப்படியாக பல்வேறு தவறுகளுக்கும் அவரை அறிமுகப்படுத்தி கடைசியில் பெயரைக் கேட்டாலே அதிருதுல்ல என்று சொல்லும் அளவிலான தாதாவாக மாற்றி விட்டது அவரை.
இவருக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவாக விளங்கியவர் பெயரும் ராஜன்தான். ராஜன் மகாதேவ் நாயர். மலையாளியான ராஜன் மகாதேவ் நாயரிடம் சேர்ந்த பிறகுதான் சோட்டா ராஜன் பெரிய ஆளானார். ராஜன் மகாதேவ் நாயருக்கு படா ராஜன் என்று செல்லப் பெயர் உண்டு. அவருடன் இணைந்து செயல்பட்ட சோட்டா ராஜன் பின்னர், மகாதேவ் படுகொலைக்குப் பிறகு அவரது ஆதரவாளர்களால் சோட்டா என்ற செல்லப் பெயர் சேர்த்து அழைக்கப்பட்டார்.
செம்பூர் - திலக் நகர்
படா ராஜன் செம்பூர், திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பதுதான் அவரது ஆரம்ப காலத் தொழில். பிறகு படிப்படியாக பல்வேறு சின்னச் சின்னத் திருட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடு ஆரம்பித்து ரவுடியாக பார்ம் ஆனவர்.
கூடச் சேர்ந்த சோட்டா ராஜன்
70களின் தொடக்கத்தில், விக்ரோலி பகுதியைச் சேர்ந்தவரான சோட்டா ராஜன், படா ராஜனுடன் வந்து சேர்ந்தார். சோட்டா ராஜனின் ஒரிஜினல் பெயர் ராஜன் சதாசிவ் நிகல்ஜே. ஆனால் சோட்டா ராஜன் என்பவரது நிரந்தரப் பெயராக மாறிப் போனது.
கள்ளடிக்கெட் பிசினஸ்
அக்காலத்தில் "டான்"கள் ரொம்ப "சின்னபுள்ளை"த்தனமாக இருந்தார்கள். அதாவது கள்ள டிக்கெட்தான் பிரதானமான வருமான வழியாக இருந்தது. அதில் மிகப் பெரிய அளவில் வருமானமும் கிடைத்து வந்தது. இதனால் கள்ள டிக்கெட்டுக்காகத்தான் அப்போது அடிக்கடி "கேங் வார்" நடக்கும்.
சாகர் எனக்கு.. மத்ததெல்லாம் உனக்கு
சாகர் சினிமா தியேட்டரின் மொத்த கள்ள டிக்கெட் காண்டிராக்டையும் படா ராஜன் எடுத்திருந்தார். அவரும் சோட்டா ராஜனும் இதில் இணைந்து ஈடுபட்டனர். மற்ற தியேட்டர் பக்கம் இவர்கள் போக மாட்டார்கள். மற்றவர்களும் இவர்கள் பக்கம் வர மாட்டார்கள்.
தொழில் அபிவிருத்தி
இந்த நிலையில்தான் சோட்டா ராஜன் அட்வைஸ்படி தொழிலை விஸ்தரிக்க ஆரம்பித்தார் படா ராஜன். ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் என இறங்கினர். போதை மருந்து கடத்தலும் இணைந்தது. கட்டப் பஞ்சாயத்தும் அதிகரித்தது. அதேபோல இன்னொரு முக்கிய தொழிலாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க ஆரம்பித்தனர்.
வர்தா பாய் கிளம்பிட்டாரு பாஸு!
இவர்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு அப்போது மும்பையின் முக்கிய மூன்று பெரிய டான்களான கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வர்தா பாய் என அழைக்கப்பட்ட்ட வரதராஜன் முதலியார் ஆகியோர்தான் இருந்தனர். ஆனால் மும்பை போலீ்ஸ் கமிஷனராக அப்போது பதவியேற்ற ஒய்.சி. பவார் என்பவர் இந்த மூன்று பேரையும் குறி வைத்துத் துரத்தவே, வர்தா பாய் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இதையடுத்து படா ராஜன் - சோட்டா ராஜன் கும்பல் பலம் பெற்று விட்டது.
தாவூத்துக்கே அடைக்கலம் கொடுத்த கும்பல்
ஒரு காலத்தில் மும்பையில் பட்டையைக் கிளப்பியது இந்த படா ராஜன் - சோட்டா ராஜன் கும்பல். என்ன விசேஷம் என்றால் ஒரு கட்டத்தில் தாவூத் இப்ராகிமுக்கே இக்கும்பல் அடைக்கலம் கொடுத்தது என்பதுதான்.
கரீம் லாலாவால் கைவிடப்பட்ட தாவூத்
கரீம் லாலா கேங்கில்தான் இருந்து வந்தார் தாவூத். ஆனால் தாவூத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் போனதால் தனது கேங்கிலிருந்து தாவூத்தை விரட்டி விட்டார் கரீம் லாலா. இதனால் படா ராஜன் - சோட்டா ராஜனை நம்பி அவர்களிடம் வந்தார் தாவூத். மூன்று பேரும் கூட்டு சேர்ந்தனர். பின்னர் படா ராஜன் மறைவுக்குப் பின்னர் தாவூத்தும், சோட்டா ராஜனும் இணைந்து செயல்பட்டனர். பிறகு இருவரும் பிரிந்தனர்.
சின்னத் தம்பி, பெரிய தம்பி போல
மும்பை தாதாக்கள் மத்தியில் படா ராஜனை தனது சொந்த அண்ணன் போல நினைத்து மரியாதையுடன் பழகி வந்தவர் சோட்டா ராஜன். இப்போது வரை படா ராஜன் மீது மரியாதையுடன் இருப்பவர் சோட்டா ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.