சச்சின் போட்ட "பிரேக்"... ஒரு நாள் முழுவதும் தலைவலியில் தத்தளித்த அஞ்சலி!
டெல்லி: வேகத்தை அதிகம் விரும்புபவர் சச்சின் டெண்டுல்கர். அதிலும் கார் ஓட்டும்போது வேகமாக ஓட்டுவதில் கில்லாடி. ஆனால் அந்த வேகம் ஒருமுறை மனைவி அஞ்சலிக்கு ஒரு நாள் முழுவதும் தலைவலியைக் கொடுத்து விட்டதாம்.
குர்கான் அருகே ஒரு விளையாட்டு மையத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சச்சின் அங்கு பேசும்போதுதான் இந்த மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
விழாவில் சச்சின் பேசியதிலிருந்து...
இங்கிலாந்து போயிருந்தபோது
அப்போது நான் இங்கிலாந்து போயிருந்தேன். அஞ்சலியும் வந்திருந்தார். பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஒரு புதிய காரை உருவாக்கியிருந்தது. அதை பரிசோதனை செய்ய என்னை அணுகினார்கள்.
பிரேக் பிடிச்சுப் பாருங்க
என்னிடம் பீட் பேக் தருமாறும், குறிப்பாக பிரேக் குறித்து சோதித்துப் பார்க்குமாறும் கேட்டுக் கொண்டனர். நானும், அஞ்சலியுடன் ஒரு ரவுண்டு கிளம்பினேன்.
வர மறுத்த அஞ்சலி
முதலில் அஞ்சலி வர மறுத்தார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றேன். சும்மா சொல்லக் கூடாது. சற்று வேகமாகத்தான் காரை ஓட்டினேன். என்ன ஸ்பீடில் போனேனன் என்பதை சொல்ல முடியாது. ஆனால் நல்ல வேகம்.
செம பிரேக்
சரியான வேகத்தில் சென்றாலும் கூட அது நல்ல வேகம்தான். அவர்கள் சொன்னது நினைவுக்கு வர நான் பிரேக்கை பயன்படுத்திப் பார்த்தேன். அப்படி ஒரு வேகத்தில் பிரேக் போட்டால் எப்படி இருக்கும். அதை நானும், அஞ்சலியும் அன்று அனுபவித்தோம்.
ஒரு நாள் முழுக்க தலைவலி
அஞ்சலிக்கு அன்று முழுவதும் சரியான தலைவலி. வலி போகவே இல்லை. இது ஒரு நல்ல அனுபவமாக இன்று வரை உள்ளது என்றார் சச்சின்.