'உதய சூரியன்' காவி நிறத்தில்தான் இருக்கும்.. மோடி என்ன சொல்கிறார் தெரிகிறதா?
டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது மோடி பேசியதாவது:
திரிபுராவில் இடதுசாரிகளின் தாக்குதலுக்கு பாஜக தொண்டர்கள் பலர் பலியாகி உள்ளனர். தேர்தல்களில் கிடைத்த வெற்றியை, தன்னுயிரை கொடுத்து உழைத்த பாஜக தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறோம்.
அச்சுறுத்துவது
மக்களை அச்சுறுத்துவதும், குழப்புவதும் இடதுசாரிகளின் கைவந்த கலை. பாஜக தொண்டர்களின் அயராத உழைப்பால்தான் இந்த வெற்றி சாத்தியமானது.
பாஜக வெற்றியை குறைத்து மதிப்பிட சிலர் நினைக்கிறார்கள், எல்லா வண்ணங்களும் காவியாக மாறிவிட்டது என்பதே உண்மை.
உதிக்கும் சூரியன்
சூரியன் மறையும்போது சிகப்பு வண்ணத்தில் இருக்கும், ஆனால் அது உதிக்கும் போது காவி நிறத்தில்தான் இருக்கும். ஒரு இடத்திலும் வெற்றி பெறாத மாநிலத்தில் பூஜ்யத்தில் இருந்து சிகரத்தை தொட்டுள்ளோம் என்பதை தேர்தல் ஆய்வாளர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
பிரபலங்கள் தேவையில்லை
பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை, இளைஞர்கள் போதும். வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முன்வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
உவமை பேச்சு
சிவப்பு கொடி கொண்ட இடதுசாரி அரசியல் மறையும் சூரியனை போலவும், காவி வண்ண கொடி கொண்ட பாஜக உதிக்கும் சூரியனை போலவும் உள்ளதாக மோடி உவமை தெரிவித்து பேசியது குறிப்பிடத்தக்கது.