சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கையில் சென்னை எக்ஸ்பிரஸ் ஹீரோ எங்கே தூங்குகிறார்?: சாத்வி பிராச்சி
மீரட்: சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கையில் சென்னை எக்ஸ்பிரஸ் ஹீரோ ஷாருக்கான் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஷாருக்கானை பற்றி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,
சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அவர் பல கோடி ரூபாய் சம்பாதித்தார். தற்போது சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோது அவர் உணர்ச்சியற்று உள்ளார். இந்த கான்கள் எல்லாம் பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டால் தான் நன்கொடை அளிப்பார்கள்.
தற்போது சென்னை தத்தளிக்கையில் கான் நடிகர்கள் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? ஷாருக்கான் மற்றும் ஆமீர் கான் படங்களை புறக்கணிக்குமாறு நான் நம் நாட்டு இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
சாத்வி பிராச்சி ஷாருக்கானை தாக்கிப் பேசுவது இது ஒன்றும் முதல் முறை அன்று.
முன்னதாக பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அதற்காக அவர் கடந்த 2010ம் ஆண்டு சிவசேனாவின் கோபத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.