உத்தரகண்ட்... பாங்காக்... கிரீஸ்... லீவுக்கு எங்கே தான் போனார் ராகுல்?
டெல்லி: இரண்டு வார கால விடுமுறையில் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எங்கே இருக்கிறார் என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
சமீபகால தொடர் தோல்விகளால் துவண்டுப் போயிருக்கிறது காங்கிரஸ். இதனால் காங்கிரஸின் தலைமையில் மாற்றம் தேவை என அக்கட்சித் தொண்டர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. மேலும், ராகுல் மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ராகுல் அரசியலில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக செய்தி பரவியது. ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் 2 வார விடுமுறையில்தான் சென்றுள்ளார் எனவும் மார்ச் 10-ந்தேதி வந்து விடுவார் என்றும் கூறினர்.
முதலில் ராகுல் பாங்காங் செல்ல முடிவெடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அவர் பாங்காக்கில் இருந்து கிரீஸ் சென்று விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், நேற்று காங்கிரஸ் பிரமுகர் ஜகதீஷ் சர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ராகுல் உத்தரகாண்டில் டெண்ட் அடித்து தங்கி இருப்பதாகவும், பாங்காக் செல்லவில்லை என்றும் புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார்.
ஆனால், இந்தத் தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்தது. ‘அந்த படம் 2008ல் எடுக்கப்பட்டது; ஜகதீஷ், காங்கிரஸ் கட்சியில் இல்லை; திட்டமிட்டு வதந்தி கிளப்புகிறார்' என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சாக்கோ விளக்கமளித்தார். இதனால், தற்போது ராகுல் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி வலுத்துள்ளது. ஆனால், தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ராகுலின் இருப்பிடம் குறித்து தெரிவிக்க மறுத்து, மவுனம் சாதித்து வருகிறது.
இதற்கிடையே, விடுப்பு முடிந்து திரும்பியவுடன் ராகுல் மீண்டும் கட்சியை புது வேகத்துடன் நடத்துவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள அனைத்து இந்திய காங்கிரஸ் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை, துணைத் தலைவரான ராகுல் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு கட்சியின் சில மூத்தத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே ராகுல் ஓய்வில் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.