ஒருவழியாக, வட கிழக்கு தேர்தல் பற்றி கருத்து சொன்னார் ராகுல் காந்தி!
Recommended Video
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வரலாறு காணாத அடி வாங்கிக்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியை எங்கே என தேடிக் கொண்டிருந்தனர் தொண்டர்கள். ஒருவழியாக இன்று மதியம், ராகுல் காந்தி தனது கருத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத காங்கிரஸ், மேகாலயாவை மட்டுமே நம்பியிருந்தது. அந்த மாநிலத்திலும், ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே தங்கள் தலைவர் ராகுல் காந்தியை தேடிக்கொண்டுள்ளனர் காங்கிரசார்.
|
பாட்டி வீட்டுக்கு போகிறேன்
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம்வரை, தேர்தல் முடிவுகள் குறித்து சமூக வலைத்தளம் வாயிலாக கூட கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 1ம் தேதி தனது 93 வயது பாட்டியை பார்க்க செல்வதாக ராகுல் காந்தி டுவிட் செய்திருந்தார். அதன்பிறகு சலனமே காட்டவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் அவர் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. வட கிழக்கில் எங்கள் கட்சியை வலுப்படுத்த உறுதியாக உள்ளோம். மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் வெற்றிகளை பெறுவோம். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆலோசனை
ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ அவர் இத்தாலியில் இருந்தபடி, தேர்தல் ரிசல்ட்டுகளை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாக கூறுகிறார்கள். மூத்த தலைவர்கள் மேகாலயா விரைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ராகுல் காந்தி வரவில்லை
மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றும் கூட கூட்டணி அமைப்பதில் தோல்வி கண்டு கோவா பாணியில் ஆட்சியை பறி கொடுத்துள்ளது. பாஜக இணைந்துகொண்டுள்ள கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். இப்படி ஒரு முக்கியமான சூழ்நிலையில் கூட ராகுல் காந்தி இந்தியாவில் இல்லாதது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சிதான்.
கர்நாடகாவிலும் எதிரொலிக்கும்
ராகுல் காந்தியையும், அவர் தாய் சோனியா காந்தியையும் இத்தாலியுடன் தொடர்புபடுத்தி பேசுவதை வழக்கமாக கொண்ட பாஜக தலைவர்களுக்கு இப்போது வெறும் வாயில் அவல் கொடுத்ததை போல உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலின்போது ராகுல் காந்தி இத்தாலிக்கு அவ்வப்போது செல்வது குறித்த விமர்சனங்களை பாஜக முன்வைக்க வாய்ப்புள்ளது.