தூக்கிலிடுவதை தவிர வேறு முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற முடியுமா? அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி!
தூக்கிலிடுவதை தவிர வேறு ஏதேனும் வழியில் மரண தண்டனையை நிறைவேற்ற முடியுமா என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி: தூக்கிலிடுவதை தவிர வேறு ஏதேனும் வழியில் மரண தண்டனையை நிறைவேற்ற முடியுமா என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கடுமையான குற்றம் புரிபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
இந்த தண்டனை முறையை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டை சேர்ந்த வழக்கறிஞர் மல்கோத்ரா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், ஒரு மனிதர் உயிரிழக்கும் போதும் கவுரமான முறையில் உயிரிழக்க வேண்டும், தூக்கிலிடும் போது அவரது கவுரவம் முற்றிலும் அழிந்து போகிறது என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடும் முறையை ஏன் மாற்றக்கூடாது? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.